சென்னை: பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் 46 அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் காலியான ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாததால் பகுதி நேர ஆசிரியர்கள் 1700 பேரை கொண்டு தான் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சில நேரங்களில் முழு நேர ஆசிரியர்களுக்கு மாற்றாக பாடம் நடத்த பணிக்கும் போது, அந்த பாடவேளைகள் கணக்கில் சேர்க்கப்படாது. இதனால் மாதத்திற்கு ரூ.10,000 கூட ஊதியம் கிடைக்காத நிலை நிலவுகிறது. இந்நிலையை மாற்றி ஒவ்வொரு மாதமும் உறுதியளிக்கப்பட்ட ஊதியம் கிடைக்கும் வகையில், பலவகை தொழில்நுட்பக் கல்லூரி பகுதிநேர ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் வழங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வரும் போதிலும், அதை ஏற்க ஆட்சியாளர்கள் மறுக்கின்றனர்.