பாலிடெக்னிக் கல்லூரி பகுதி நேர ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் வழங்க வேண்டும்: தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ்  வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் 46 அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் காலியான ஆசிரியர்  பணியிடங்கள் நிரப்பப்படாததால் பகுதி நேர ஆசிரியர்கள் 1700 பேரை கொண்டு தான் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சில நேரங்களில் முழு நேர ஆசிரியர்களுக்கு மாற்றாக பாடம் நடத்த பணிக்கும் போது, அந்த பாடவேளைகள் கணக்கில் சேர்க்கப்படாது. இதனால் மாதத்திற்கு ரூ.10,000  கூட ஊதியம் கிடைக்காத நிலை நிலவுகிறது. இந்நிலையை மாற்றி ஒவ்வொரு மாதமும் உறுதியளிக்கப்பட்ட ஊதியம் கிடைக்கும் வகையில், பலவகை தொழில்நுட்பக்  கல்லூரி பகுதிநேர ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் வழங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வரும் போதிலும், அதை ஏற்க  ஆட்சியாளர்கள் மறுக்கின்றனர்.

பொறியியல் மற்றும் கலை அறிவியலில் முதுநிலைப் பட்டப்படிப்பு படித்த பகுதி நேர ஆசிரியர்கள் மாதம் முழுவதும் பணி செய்து கிடைக்கும் ₹10,000 முதல்  ₹15,000 வரையிலான ஊதியத்தை வைத்துக் கொண்டு எவ்வாறு குடும்பம் நடத்த முடியும். இவர்களில் பலர் ஊதியம் ₹4000 வழங்கப்பட்ட காலத்திலிருந்து பணியாற்றி  வருபவர்கள். வாழ்க்கையின் பெரும்பகுதியை பகுதி நேர ஆசிரியர்களாகவே கழித்து விட்ட இவர்களால் இனி வேறு பணிகளுக்கு செல்வதும் சாத்தியமற்றது.எனவே, பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும். உடனடியாக அது சத்தியமில்லை  என்றால் பாடவேளை அடிப்படையில் ஊதியம் வழங்கும் முறையை மாற்றி தொகுப்பூதியமாக மாதம் ₹30,000 வழங்க அரசு முன்வர வேண்டும். இவ்வாறு ராமதாஸ்  வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: