வங்க கடலில் இரு தினங்களுக்கு முன் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிநேற்று முன்தினம் இரவு புயலாக வலுப்பெற்றது. கடலோர ஆந்திரா மற்றும் ஒடிசா இடையே இந்த புயல் மையம் கொண்டிருந்தது. இந்திய வானிலை ஆய்வு மையம் இந்த புயலுக்கு ‘தயே’ என பெயரிட்டது. இது வடக்கு நோக்கி நகர்ந்ததால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. வட மாநிலங்களில் மட்டும் பலத்த மழை பெய்து வருகிறது. புயல் உருவான 9 மணி நேரத்திலேயே அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. நேற்று மாலை நிலவரப்படி அந்த காற்றழுத்தம் சத்தீஸ்கர் அருகே மையம் கொண்டிருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக இன்று ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், வங்க கடலில் காற்றழுத்தம் நீடிப்பதால் ஆந்திராவை ஒட்டியுள்ள கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.