முத்தலாக் அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்

புதுடெல்லி: முத்தலாக்கை தண்டனைக்குரிய குற்றமாக கருதும் அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று ஒப்புதல் அளித்தார். இஸ்லாமிய மதத்தில் மூன்று முறை தலாக் என கூறி விவாகரத்து செய்யும் நடைமுறை இருந்தது. இது சட்ட விரோதமானது என கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. மேலும், இதற்கு மாற்றாக புதிய சட்டத்தை இயற்றும்படியும் மத்திய அரசை உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது.இதனைதொடர்ந்து, கடந்த மாதம் 28ம் தேதி மக்களவையில் முத்தலாக்கிற்கு தடை விதிக்கும் மசோதாவை அரசு தாக்கல் செய்தது. எதிர்கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், அவசர கதியில் மசோதா இயற்றப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இருந்த போதிலும் பாஜ.வுக்கு மக்களவையில் பெரும்பான்மை உள்ளதால் மசோதா நிறைவேற்றப்பட்டது.

அதே நேரம், மாநிலங்களவையில் மசோதா நிறைவேறவில்லை. எதிர்க்கட்சிகள் கோரிக்கையை ஏற்று மசோதாவில் சில திருத்தங்களை மத்திய அரசு மேற்கொண்டது. எனினும் பெரும்பான்மை இல்லாததால் மசோதாவை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், மசோதா நிறைவேறும் வரையில் முத்தலாக் நடைமுறைக்கு எதிராக அவசர சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வந்தது.   பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முத்தலாக் கூறுவது தண்டனைக்குரிய குற்றமாக கருதும் அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்குப்பின் முத்தலாக் அவசர சட்டம் ஜனாதிபதிக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டது. அதில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்றிரவு கையெழுத்திட்டார்.அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் நிருபர்களை சந்தித்த மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ‘‘முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவிற்கு காங்கிரஸ்  ஒத்துழைப்பு தரவில்லை. வாக்கு வங்கி அரசியல் காரணமாக மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளது. முத்தலாக் நடைமுறையை தண்டனைக்குரிய குற்றமாக கருதும் அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த சட்டத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, முத்தலாக்கால் பாதிக்கப்பட்ட பெண் அல்லது அவரது ரத்த சொந்தம் உறவினர்கள் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம். கணவன், மனைவி இருவரும் சமரசம் செய்து கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஒரு பெண் வழிநடத்தும் காங்கிரஸ் கட்சியே இந்த மசோதாவிற்கு ஆதரவு தரவில்லை. மீண்டும் சோனியாஜியிடம் வலியுறுத்துகிறேன்.  நாட்டின் அக்கறையில் ஆர்வம் கொண்டு இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. உங்கள் வாக்கு வங்கியை உயர்த்தி பெண்களுக்கு நீதி வழங்கும் மசோதா நிறைவேற்றுவதற்கு உதவி செய்யுங்கள்” என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: