சென்னை: திருமுருகன் காந்தியை திட்டமிட்டு பழிவாங்குவதா? என்று அதிமுக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஐ.நா.மனித உரிமை அவையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தின் போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூடு குறித்து உண்மை நிலையை பேசியதற்காக அவர் மீது தேச துரோக வழக்குப்பதிவு செய்து, அவர் நாடு திரும்பியதும் பெங்களூரு விமான நிலையத்திலேயே கைது செய்யப்பட்டு, தமிழ்நாடு காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். அந்த வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை பெருநகர 11வது மாஜிஸ்திரேட் நீதிமன்றம், திருமுருகன் காந்தியின் செயல்பாடுகளில் தேச துரோக நடவடிக்கை எதுவுமில்லை என காவல்துறையை கடிந்து கொண்டதுடன், அவரை சிறைக்கு அனுப்பவும் மறுத்துவிட்டது. நீதிமன்றத்தின் கண்டனத்திற்குள்ளான பிறகும் அதிமுக அரசின் காவல்துறை, தன் கடுமையான இயல்பை மாற்றிக்கொள்ளாமல், எப்படியும் திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ளும் எண்ணத்தில்,