டெல்லியில் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற குழு தலைவர்கள் ஆலோசனை..!!

டெல்லி: எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற குழு தலைவர்கள் டெல்லியில் ஆலோசனை நடத்தினர். பெகாசஸ் மென்பொருள் மூலம் அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட 300 பிரபலங்களின் செல்போன்கள் ஒட்டுக் கேட்பு, வேளாண் சட்டங்கள் ரத்து செய்வது குறித்து நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால், பெகாசஸ் விவகாரத்தில் சட்ட விரோதமாக எதுவும் நடக்கவில்லை என கூறி ஒன்றிய அரசு விவாதம் நடத்த மறுக்கிறது. இதனால், மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளில் இருந்தே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவதால், கடந்த 8 நாட்களாக நாடாளுமன்றம் முடங்கியது. இதனிடையே எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற குழு தலைவர்கள் டெல்லியில் ஆலோசனை நடத்தினர். காங்கிரஸின் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடக்கும் ஆலோசனையில் திமுக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றுள்ளன. டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட எம்.பி.க்களும் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய டி.ஆர்.பாலு; ‘27% இடஒதுக்கீட்டிற்காக நீதிமன்றங்களிலும், பாராளுமன்றத்திலும் தொடர்ந்து திமுக குரல் எழுப்பியது; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் தொடர்ந்து பிரதமருக்கு கடிதமும், நேரில் சென்று கோரிக்கையும் வைத்தார். இது ஒட்டுமொத்த இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. இது முதல் வெற்றி; பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான 50% இடஒதுக்கீடுக்காக தொடர்ந்து போராடுவோம் என கூறினார். இதனை தொடர்ந்து பேசிய தொல்.திருமாவளவன் எம்.பி; போராட்டம், நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் காரணமாக மத்திய அரசு அகில இந்திய அளவில் OBC பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்கியுள்ளது. இவற்றை பெற்று தந்த தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு நன்றி என கூறினார். மாணிக்கம் தாகூர் எம்.பி பேசியதாவது; OBC பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என எந்த மாநில அரசும் கோரவில்லை. இவ்விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் ஆர்.எஸ்.எஸ் நிலைப்பாடு என்பது எதிராகவே இருந்துள்ளது. ஆனால், வெற்றிக்கு பிறகு சொந்தம் கொண்டாடி கொள்கிறார்கள் என கூறினார்….

The post டெல்லியில் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற குழு தலைவர்கள் ஆலோசனை..!! appeared first on Dinakaran.

Related Stories: