பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் விஜய் சேதுபதி, மேலதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முடியாததால், வேலை கிடைக்கவில்லை. கோடீஸ்வரர் அரவிந்த்சாமி, அவரது எதிரிகள் செய்த சூழ்ச்சியில் சிக்கியதால், சொத்துகள் பறிபோகிறது. இந்நிலையில் விஜய் சேதுபதியும், அரவிந்த்சாமியும் திடீரென்று சந்திக்கின்றனர். இதனால் சில எதிர்பாராத சம்பவங்கள் நடக்கின்றன. அது என்ன என்பது மீதி கதை. முழுநீள மவுன படத்தில், இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை பிரமாதமாக நடித்துள்ளது. வரிகளுடன் கூடிய பாடல்கள் ரசிகர்களை ஏமாற்றவில்லை. நவரச நடிப்பை பார்வையாலும் மற்றும் சைகைகளாலும் வெளிப்படுத்தியுள்ள விஜய் சேதுபதிக்கு விருதுகள் கிடைக்கும். அரவிந்த்சாமி வசிக்கும் ஆடம்பர பங்களாவையும், அவரது இயல்பான நடிப்பையும் ரசிக்க முடிகிறது.
திருடன் சித்தார்த் ஜாதவ் மற்றும் அதிதி ராவ் ஹைதாரி, ஜரீனா வஹாப் உள்பட பலர் நன்றாக நடித்துள்ளனர். மும்பையின் ஜனநெரிசலையும், வாழ்விட சந்தடியையும் கரண் பி.ராவத் கேமரா கண்முன் கொண்டு வந்துள்ளது. காட்சிகளை எடிட்டர் இன்னும் விறுவிறுப்பாக நறுக்கி இருக்கலாம். அரங்க அமைப்புகள் தத்ரூபமாகவும், பிரமிப்பு ஏற்படுத்துவதாகவும் இருக்கின்றன. அதிகமாக பணம் வைத்திருக்கும் அரவிந்த்சாமி, அடுத்தவேளை சோற்றுக்கே அல்லல்படும் விஜய் சேதுபதி ஆகிய கேரக்டர்களை வைத்து, காந்தி படம் இடம்பெற்றுள்ள பணம் வாழ்க்கைக்கு எவ்வளவு அத்தியாவசியமானது என்று சொல்லியிருக்கிறார், மராத்தி இயக்குனர் கிஷோர் பாண்டுரங் பெலேகர்.
