கொச்சி: மலையாளத்தில் டொவினோ தாமஸ், கயாடு லோஹர் நடிக்கும் படம், ‘பள்ளிச்சட்டம்பி’. டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கியுள்ள இப்படத்தின் கதை, கடந்த 1950 மற்றும் 1960களில் நடப்பது போல் அமைந்துள்ளது. வேர்ல்ட் வைட் பிலிம்ஸ் சார்பில் நவுஃபல், பிரிஜீஷ், சிக்யூப் ப்ரோஸ் எண்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் சாணக்யா சைதன்யா சரண் தயாரிக்கின்றனர். மாறுபட்ட கெட்டப்பில் டொவினோ தாமஸ் நடிக்கிறார். முதலில் நேரடியாக மலையாளத்தில் உருவாகும் இப்படம் பிறகு தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் டப்பிங் ஆகிறது. வரும் ஏப்ரல் 9ம் தேதி படம் திரைக்கு வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு கேரள மாநிலம் இடுக்கி பகுதியிலுள்ள மலங்கரா நீர்த்தேக்கம் அருகே நடந்தது. படப்பிடிப்பு முடிந்ததும் செட்டுகள் அமைக்க பயன்படுத்தப்பட்ட பொருட்களை அங்கேயே விட்டுவிட்டு படக்குழுவினர் சென்றுவிட்டனர். இதுகுறித்து ஒரு புகார் அளிக்கப்பட்டது. உடனே விசாரித்த இடுக்கி குடாயத்தூர் பஞ்சாயத்து, ‘பள்ளிச்சட்டம்பி’ படக்குழுவினருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தது. இதையடுத்து ஜேசிபி மூலம் அங்கிருந்த குப்பைகளை படக்குழுவினர் அப்புறப்படுத்தினர்.
