தென்னிந்திய படவுலகில் தனது அழகு மற்றும் இளமையால் இளைஞர்களின் மனதில் இடம் பிடித்தவர், கிரித்தி ஷெட்டி. 2021ல் வெளியான ‘உப்பெனா’ என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமான அவர், தொடர்ந்து தெலுங்கில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். தற்போது தமிழில் பிரதீப் ரங்கநாதனுடன் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ என்ற படத்தில் நடித்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இப்படம், வரும் 18ம் தேதி திரைக்கு வருகிறது. தொடர்ந்து கார்த்தி ஜோடியாக கிரித்தி ஷெட்டி நடித்துள்ள ‘வா வாத்தியார்’ என்ற படம், வரும் 12ம் தேதி திரைக்கு வருகிறது. இதையடுத்து, ரவி மோகன் ஜோடியாக அவர் நடித்துள்ள ‘ஜீனி’ என்ற படம் இம்மாத இறுதியில் திரைக்கு வருகிறது.
தமிழில் ஒரே நேரத்தில் அடுத்தடுத்து மூன்று படங்கள் ரிலீசாவதால் அதிக மகிழ்ச்சியுடன் காணப்படும் கிரித்தி ஷெட்டி, முன்னதாக ‘தி வாரியர்’, ‘கஸ்டடி’ ஆகிய இரு மொழிப் படங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இவ்விரு படங்களும் தமிழில் தோல்வி அடைந்தது. தனது நடிப்பில் மூன்று நேரடி தமிழ் படங்கள் ரிலீசாவது பற்றி கிரித்தி ஷெட்டி கூறுகையில், ‘எனது நேரடி தமிழ் படங்கள் ஒன்றன் பின் ஒன்றாக திரைக்கு வரும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. இந்த பிரபஞ்சம்தான் அதை சாத்தியமாக்கி இருக்கிறது என்று நம்புகிறேன். மூன்று படங்களிலும் எனது கேரக்டர் மிகவும் வித்தியாசமாக இருக்கும்’ என்றார்.
