பெங்களூரு: தமிழ் திரைப்பட நடிகர்களில் மிகவும் பிரபலமானவர் அர்ஜூன். கர்நாடகாவை சேர்ந்த இவர், தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடா ஆகிய மொழிகளில் பல படங்களில் ஹீரோவாக நடித்து உள்ளார். கடந்த 2018ம் ஆண்டு கன்னடத்தில் படமாக்கப்பட்ட ‘விஸ்மையா’ திரைப்படத்தில் நடித்த கன்னட நடிகை ஸ்ருதி ஹரிகரனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவர் மீ டூ வாயிலாக புகார் அளித்தார். இதுகுறித்து பெங்களூரு போலீசிலும் புகார் அளித்திருந்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த விவகாரம் கர்நாடக வர்த்தக சபையிலும் புயலை கிளப்பியது. நடிகையிடம் அர்ஜூன் மன்னிப்பு கேட்க வேண்டுமென்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் பெரும்பாலான நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர், அர்ஜூனுக்கு ஆதரவாக செயல்பட்டதால் அவர் மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறிவிட்டார். இருப்பினும் நடிகை ஸ்ருதி ஹரிகரன் அந்த வழக்கில் இருந்து பின்வாங்கவில்லை. போலீசார் நடவடிக்கை எடுத்தே ஆகவேண்டுமென்று விடாப்பிடியாக இருந்தார்.