லண்டன் விமான நிலையத்தில் ஊர்வசி ரவுட்டேலாவின் பேக் திருட்டு

லண்டன்: விம்பிள்டன் போட்டிக்காக லண்டன் சென்ற நடிகை ஊர்வசி ரவுடேலா, தனது விலையுயர்ந்த உடைமைகள் விமான நிலையத்தில் திருடப்பட்டதாகக் கூறி, அதை மீட்டுத் தருமாறு சமூக வலைதளம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த 2023ம் ஆண்டு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின் போது, தனது 24 காரட் தங்க ஐபோன் தொலைந்துவிட்டதாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடேலா புகார் அளித்திருந்தார்.

இது தொடர்பாக அகமதாபாத் காவல்துறைக்கு சமூக வலைதளத்தில் அவர் கோரிக்கை விடுத்தது பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்த நிலையில், தற்போது மும்பையில் இருந்து விம்பிள்டனுக்காக லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு எமிரேட்ஸ் விமானத்தில் பயணம் செய்துள்ளார். அங்கு உடைமைகளைப் பெறும் இடத்தில், தனது பழுப்பு நிற ‘டியோர்’ பிராண்ட் பை திருடப்பட்டுவிட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

தனது விமானப் பயணச்சீட்டு மற்றும் உடைமைகளுக்கான சீட்டு ஆகியவற்றின் படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள அவர், தனது விலை உயர்ந்த பையை மீட்டுத் தருமாறு லண்டன் காவல்துறை மற்றும் எமிரேட்ஸ் விமான நிறுவனத்திற்கு அவசர கோரிக்கை விடுத்துள்ளார். ஊர்வசியின் இந்த பதிவுக்குப் பலரும் வேடிக்கையான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories: