மும்பை: புதிய முயற்சியாக தன்னுடைய ‘சித்தாரே ஜமீன் பர்’ திரைப்படத்தை திரையரங்க வெளியீட்டிற்குப் பிறகு நேரடியாக யூடியூபில் வெளியிடுகிறார் ஆமிர் கான். பார்வையாளர்கள் ரூ.100 செலுத்தி படத்தைப் பார்க்கும் வகையில் ஆமிர் கான் இதனைத் திட்டமிட்டிருக்கிறார். படத்தை நேரடியாக யூடியூபில் வெளியிடத் திட்டமிருந்தும், அது குறித்து வெளிப்படையாகச் சொல்லாமல் மறைத்ததற்கு ஆமிர் கான் மன்னிப்புக் கேட்டிருக்கிறார். இது குறித்து அவர், ‘‘நான் கைகூப்பி மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
ஏனெனில் ‘சிதாரே ஜமீன் பர்’ யூடியூபில் வெளியாகாது என்று நான் பொய் சொன்னேன். வேறு வழியில்லாததால் இப்படிச் செய்தேன். படத்தின் திரையரங்க வியாபாரத்தைப் பாதுகாக்க வேண்டியிருந்தது. நான் திரையரங்குகளுக்கு மிகவும் விசுவாசமானவன், என் வாழ்க்கை சினிமாவுடன் தொடங்கியது. எனவே, என் படங்களின் திரையரங்க வியாபாரத்தைப் பாதுகாக்க எப்போதும் முயற்சித்து வருகிறேன். இருந்தாலும், நான் பொய் சொன்னதற்காக மன்னிப்புக் கேட்கிறேன். இல்லையெனில், இந்தப் படத்திற்கான என் கனவுகள் அங்கேயே முடிந்திருக்கும்.
பே-பர்-வியூ மாதிரிக்கும் சந்தா மாதிரிக்கும் இடையே பெரிய வித்தியாசம் உள்ளது. நான் ஒரு படத்தை 8 வாரங்களுக்குப் பிறகு சந்தா மாதிரியில் வெளியிடும்போது, மக்கள் என் படத்தை வாங்குவதில்லை. அவர்கள் ஓடிடி தளத்திற்கு மட்டுமே சந்தா செலுத்துகிறார்கள். அப்போது யாராவது அதைப் பார்க்க விரும்பினாலும் பார்க்காவிட்டாலும் அது பொருட்டல்ல. ஒரு பெரிய நிறுவனத்திடமிருந்து எனக்கு ரூ.125 கோடி வேண்டாம், என் பார்வையாளர்களிடமிருந்து 100 ரூபாய் கிடைப்பதே போதும்’’ எனக் கூறியிருக்கிறார்.
