ஐயப்பனின் அருள் வடிவங்கள்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

ஐயப்பன் சபரிகிரிவாசனாக, பிரம்மச்சரிய விரதம் பூண்டு இருந்தாலும், அவர் அநேக அவதாரங்கள் எடுத்திருப்பதாகப் புராணங்கள் சொல்கின்றன. அவற்றில் சிறப்பான பத்து வடிவங்களைக் காண்போம்.

1) ஆதி ஸ்ரீபூதநாதர்

இவர் பொதுவாக ஐயனார் என்று அழைக்கப்படுவார். கிராமங்களில் எல்லைத் தெய்வமாக அமர்ந்து காத்தருளுபவர். காலத்தே மழை பெய்விக்கச் செய்து பயிர்கள் செழிக்க அருள்பவர். பஞ்சம் நீங்கி பசுமை நிலவ இவரே காரணம்.

2) சம் மோஹன சாஸ்தா

பக்தர்களின் இல்லத்தை காப்பவர். இல்லறத்தில் ஒற்றுமையை ஓங்கச் செய்பவர். குடும்ப அமைதிக்குக் காரணமாக விளங்குபவர்.

3) கல்யாண வரத சாஸ்தா

தடைப்பட்ட திருமணங்கள் நடைபெற அருள்புரிபவர். செவ்வாய் தோஷத்தினால் ஏற்படும் உபாதைகளை நீங்கச் செய்பவர். இவரை வழிபடுவோர் மங்களங்கள் யாவும் பெறுவர்.

4) வேத சாஸ்தா

கலைகளில் ஞானம் பெற உதவுபவர். புததேவன் போல், சாஸ்திர ஞானம் அருளி வேதம் தழைக்க வழிவகுத்து, வேதத்தின் சொற்படி நம்மை வழிநடத்திச் செல்பவர்.

5) ஞான சாஸ்தா

கல்லால மரத்தின் கீழ் சீடர்களுடன் எழுந்தருளியிருப்பவர். மாணிக்க வீணையை கையில் ஏந்தி மேதா தட்சிணா மூர்த்தியாய், குரு பகவான் ஸ்தானத்தில் அமர்ந்து வணங்குவோருக்கு கல்வி அறிவை அருளசெய்பவர்.

6) பிரம்ம சாஸ்தா

சந்தான பாக்கியம் பெற அருளும் நாயகனாய் பிரம்ம, சாஸ்தாவாய் சுக்கிரன் போல, சுடர்மிகு தேஜஸூடன் காட்சி தந்து அருள்புரிபவர்.

7) ஸ்ரீதர்ம சாஸ்தா

பக்தர் தம் தவறுகளைக் களைந்து, பிழைகள் பல பொறுத்து, ஞானமும், மவுனமும் உபதேசித்து, ஜாதி, மத, இன பேதமின்றி தடுத்தாட்கொண்டு முக்திநிலை அருள்பவர். சனி உபாதை நீங்கச்செய்பவர்.

8) மஹா சாஸ்தா

இவரை வணங்குவோர் வாழ்வில் முன்னேற்றம் அடைவார்கள். ராகுவினால் ஏற்படும் கிரக தோஷம் நீங்கச் செய்பவர். மிகுந்த வல்லமை உள்ளவர்.

9) வீர சாஸ்தா

கேது தோஷம் தீர்ப்பவர். கைகளில் ஆயுதம் தாங்கியும், புலி மீதேறித் தீயவர்களை அழித்தும், பக்தர்களைக் காக்கும் மாவீரன். ருத்ர குமாரன்.

10) கலியுக வரதன்

நான்கு யுகங்களிலும் தொடரும் தெய்வ அவதாரம்தான் சுவாமி ஐயப்பனின் அவதாரம் எனப் புராணங்கள் போற்றுகின்றன. இந்த கலியுகத்தில் விரதம் இருந்து, இருமுடி கட்டி வரும் பக்தர்களைக் காக்கும் கடவுளாக கலியுக வரதனாக விளங்கும் வடிவமே சபரிகிரி வாசனின் எழில் வடிவம்.

தொகுப்பு: மகாலட்சுமி சுப்ரமணியன்

Related Stories: