நெஞ்சம் பயில நினைகின்றிலேன்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

அபிராமி அந்தாதி-சக்தி தத்துவம்

உமையம்மைக்கேயுரிய தெய்வீக பண்புடைய திருவடியை மெல்லடியார் என்று குறிப்பிடுகிறார். இதை எல்லாம் மனதில் கொண்டே பாதத்தின் தன்மையை அதை பெற்ற உமையம்மையை பஞ்சஞ்சும் மெல்லடியார் என்கிறார்.

அடியார்

அடியார் என்ற வார்த்தை அடித்தல் என்ற துன்புறுத்தும் செயலை குறிக்கும். அடி என்ற வினைச்சொல் ஆர் என்ற மரியாதை விகுதியுடன் சேர்ந்து அடியார் என்றானது.  அடியார் என்பவர்கள் அடிக்க மாட்டார்கள். துன்புறுத்தாது இருக்கும் பண்பைக் கொண்டவர்கள் என்பது பொருள். இச்சொல், முற்றிலும் உலக வழக்கின் பாற்பட்டது. அடித்தல் என்பது அறத்தின் பாற்பட்டது. அன்பின் பாற்பட்டது. ஆற்றலின் பாற்பட்டது என மூவகையாய் உள்ளன. அன்பின்பாற்பட்டது என்றால் பிறருக்கு தீங்கு இழைப்பவர்கள், திருடுதல் முதலான இழிவான குற்றங்களை செய்பவர்கள் அது செய்யாதிருத்தல் பொருட்டு தண்டிப்பர். தாயார், தன் குழந்தையின் அறியாமையினால் ஏற்படும் துன்பத்திலிருந்து காப்பதற்காகவும், அது செய்யும் சிறு சிறு பிழைகளை அச்சுறுத்தி திருத்துவதற்காகவும், மெல்ல அடிப்பது என்பது அன்பின்பாற்பட்டது.

அரசன் தன் வலுவை நிறுவுவதற்காக எதிரியை தலை வீழ அடிப்பதாகும். உமையைம்மை இந்த மூன்று வகையிலும் அடிக்கும் திறன் பெற்றிருப்பவள் என்பதை துட்டவே “அடியாள்” என்கிறார். “உன்னையே அன்னையே என்பன் ஓடிவன்தே” (33) அன்பின் வழி. “அறம் - பாழ் நரகக் குழிக்கே அழந்தும் கயவர்’’ (79) ஆற்றலின் வழி “உயிர் அவி உண்ணும் உயிர் சண்டி”  (77) என்பனாலும் நன்கு அறியலாம். ``ஆளுகைக்கு உன்தன் அடித்தகள் உண்டு’’ (39) அன்பின் வழி அறத்தின்வழி இந்தவகையினும் அறத்தின், வழியாயினும், ஆற்றலின் வழியாயினும், யான் செய்த பிழையை தண்டிக்காது பொறுத்து, அடிக்காது அருள வேண்டும் என்பதை “சுட்டவே” “அடியார்” என்கிறார்.

பெற்றபாலரையே என்ற சொல்லால் தனக்கு பிறந்த குழந்தையை குறிப்பிடுவார் மேலும் புத்திரர்கள் ஐவர் (மருமகன்,தன்தங்கைமகன்,தன் கணவனின் உடன்பிறந்தார், பிள்ளைஇல்லாத நிலையில் பிள்ளையாக சுவீகரிக்கப்பட்டவர் பிறந்த குழந்தைகள் என்றாலும் தன் இறப்பிற்கு பிறகு சடங்கு செய்யும் அதிகாரம் உள்ள பிள்ளையையே பெற்ற பிள்ளை என்கிறது சாத்திரம். பெற்றபாலரையேபெற்றபாலரையே என்ற சொல்லால் தனக்கு பிறந்த குழந்தையை குறிப்பிடுவார். மேலும் ஒரு தாய்கு, மருமகன், தன்தங்கை மகன் தன் கணவனின் உடன் பிறந்தான் மகன் உயிர்காத்து வாழ்வளித்தோன். பிள்ளை இல்லாத நிலையில், பிள்ளையாக சுவீகரிக்கப்பட்டவர் இவர்கள் ஐவரும் பாலர் என்ற சொல்லாலேயே பிள்ளை என அழைக்கப்பட்டனர்.

அவ்விதமின்றி சாத்திரத்தில் ஒரு தாய்க்கு பல பிள்ளைகள் இருப்பினும், இறுதிர்கடனை செய்வதற்கு தகுதி உடைய பிள்ளையையே முதன்மைப் படுத்துவர். அந்த பிள்ளைக்கு, தான் பெற்ற பிள்ளை என்று பெயர். அதை மனதில் கொண்டு தான் பெற்ற பாலரையே என்கிறார் பட்டர். உமையம்மையைப் பொறுத்தவரை உலகிலுள்ள அனைவருமே அவளுக்கு குழந்தைதான். இதையே சகஸ்ரநாமம் ``ஆப்ரம்மகீட ஜனனி’’ என்கிறது. இதற்கு பிரம்மா முதல் புழுவரை ஈன்றெடுத்த தாய் உமையம்மையே இதையே பூத்தளே புவனம் பதினான்கையும் என்பதனால் அறியலாம் என்றாலும், பரமனருளால் பிராட்டியார்க்கு ஐந்து திருமகன்கள் என்கிறது புராணம் கணபதி, வீரபத்திரர், பைரவர், சாஸ்த்தா இவ்வனைவரும் உமையம்மையின் பெற்ற பிள்ளையாக கருதத்தக்கவர்கள்.

உமையம்மையினிடத்து கணபதியும், பைரவரும், பவானியிடத்து வீரபத்திரரும், விஷ்ணுவிடத்து சாஸ்த்தாவும் கங்கையிடத்து முருகனும் பெற்ற பிள்ளைகள் என்கிறது ஒரு ஆகம வசனம். இவர்கள் ஐவருள் முருகனை மிக சிறப்பாக சுட்டிக்காட்டுகிறார் பட்டர்.கணபதி - தடக்கையும், செம்முகனும்-பைரவர், முந்நான்கு இருமூன்று எனத்தோன்றிய - ஆறுமுகர், மூதறிவின் - சாஸ்த்தா, மகனும் - வீரபத்திரர் உண்டாயதன்றே ‘’வல்லி நீ செய்த வல்லபமே’’ (65)  என்பதனால் நன்கு அறியலாம். இதையே பட்டர் பெற்ற பாலரையே என்கிறார்.

மலை அரசனான இமவான் என்பவன் பார்வதியை மகளாக கருதினார். ‘இமவான் அளித்த’ (99)  ‘உன்னையே அன்னையே என்பன் ஓடி வந்தே’ (33 ) மாத்ரு   ‘எம்பிராட்டி’ (14  )  மஹாராக்ஞி என்கிறது நாமாவளி ‘அடியேன்’  - 22  என்பதால் நன்கு அறியலாம். அந்த வகையில் அபிராமி பட்டர் உமையம்மையாக கருதி வழிபட்டு தான் செய்த அனைத்து பிழைகளையும்  தண்டிக்காமல்  (அதாவது அடிக்காமல்) தன்னை காத்து அருள வேண்டும் என்று உமையம்மையை மாத்ரு பாவமாக கருதி தன் பிழை பெறுக்கவும் மகிழ்ந்து அருளவும் வேண்டுகிறார்.

நோன்பு - உபாசனை நெறியில் உபாசகன் எந்த தெய்வத்தை உபாசிக்கிறானோ அதற்கு உகந்த நாட்களில் பசிப்பிணியை பாராது பட்டினி கிடந்து இறை நினைத்து வழிபடுவதை நோன்பு என்பர். அந்தவகையில் உமையம்மைக்கு அமாவாசை, பௌர்ணமி, அஷ்டமி, என்ற திதிகளிலும்,   பூச நட்சத்திரத்திலும்,  வெள்ளிக்கிழமைகளிலும், உண்ணாது, உறங்காது தன்னை வருத்தி இறை அருளை பெற முயலும் சாதனத்தையே நோன்பு என்ற பொருள்படும் “தவ” என்ற சொல்லால் குறிப்பிடுவர்.

விரதம் - ரதம் என்ற வட சொல்லிற்கு விரும்புவது, இச்சிப்பது என்பது பொருள். “வீ” என்பதற்கு இல்லாதது என்பது பொருள். “விரதம்” என்பதற்கு விருப்பமில்லாமல் இருப்பது என்பது பொருள். இந்த இடத்தில் இறைவியை தவிர, அவள் அருளை பெறுவதை தவிர பிறபொருள்களில் விருப்பமில்லாது இறை அருள் ஒன்றையே நாடியிருப்பதே “விரதம்”   என்று பொருள். “உண்ணாது ஒழியினும் உன்னிலும் வேண்டுவது ஒன்றில்லையே’ -55 என்பதனாலும் அறியலாம்.

இதை வடமொழி “பாவம்” என்கிறது. குழந்தையாய் [சத்புத்ரபாவம்] எண்ணுவது, தாயாக எண்ணுவது [மாத்ருபாவம்] “உன்னையே அன்னையே என்பன் ஓடிவந்தே” -33 இந்த பாவத்தையே விரதம் என்று பொருள்படும் “தவ”   சொல்லால் குறிப்பிடுகிறார்.  “தீ” - தவ என்பதற்கு தீ என்பது பொருள். இறைவியை தீயில் வழிபடுவதற்கு வேள்வி என்று பொருள். மேலும் தீபம் ஏற்றி வழிபடுவதற்கு உபசாரம் என்று பொருள். விளக்கில் தோன்றும் ஒளியாக கருதி வழிபடுவதற்கு த்யானம் என்பது பொருள்.

இவ்வனைத்து வகையாலும், இறைவியை தொழுவதற்கு சாதனமாக உள்ள   ‘தவ’ எனும் பொருள்படும் தீயை குறிப்பிடுகிறார். தவத்தின் பயனாக ஏற்படும் ஞான ஒளிக்கும் தீ என்றே பொருள். இதை “முந்நான்கிரு மூன்று எனத்தோன்றிய மூதறிவின்” -65 என்பதனால் சிவபொருமானின் முகத்தோற்றத்திலிருந்து தோன்றிய தீயைக்குறிப்பிடுகிறார். “தீபத்தை” “ஒளியே ஒளிரும் …-24” “கனலும்” -68 என்பதனாலும் அறியலாம்.

காடு - தவ என்ற சொல்லிற்கு காடு என்பது பொருள். கொடிய மிருகங்கள் இல்லாததும் குளிர்ந்த அருவிகள் கொண்டதும், அஞ்சத்தக்க சூழல் இல்லாததும் ஆகிய இடத்தில் தன்னந்தனியாக தவம்புரிவார்கள்.  இந்த இடத்திற்கு காடு என்று பெயர். வானப் பிரஸ்தன்என்பது காட்டை குறித்து தவம் செய்ய புறப்பட்டோரை குறிப்பிடும் சொல். உமையம்மை எழுந்தருளியிருப்பது வில்வ வனமாகும் (திருக்கடையூர்) ஸ்ரீவித்யா எழுந்தருளியிருப்பது கடம்பவனம். மேலும் சுடுகாட்டையும் காடு என்ற சொல்லால்குறிப்பிடுவர். கடவூர் மயானம், காசி மயானம், கச்சி மயானம், என்ற இடங்களில் இறைவன் வசிக்கிறார். சுடுகாட்டையும் “தவ” என்ற சொல்லால் குறிப்பிடுகிறார். சக்தி வழிபாடு செய்வோரில் ஒருசிலர் காளியை (மசானக்கொள்ளை) வழிபடுவார்கள். அந்த வகையில் உமையம்மை “அங்காளி” எனப்படுகிறாள்.

“தவ” என்பது ஸ்தவ என்ற வடசொல்லின் தமிழாக்கமாகும். தன்னை இறைவிக்கு அறிமுகப்படுத்திக்கொள்ள, இறைவியை தான் அறிய பயன்படும் வகையில் அமைவது துதி. இதையே “தோத்திரம் செய்து தொழுது” -67 என்பதனாலும் அறியலாம். உன் தவ நெறிக்கே என்ற சொல்லால் இறைவியை வழிபட உதவும் ஆகமம், மற்றும் காட்டில் சென்று செய்யும் தவம், மனதினால் செய்யும் விரதம், உடலால் செய்யும் நோன்பு, தவம் செய்வதற்குரிய இன்னபிற இடம், அதற்குரிய மந்திரம், இறைவிக்கான திருஉருவம் அமைக்கும் முறை   அகத்திலும், புறத்திலும், மனதாலும், வாக்காலும், காயத்தாலும், அறிவாலும், நெறியாலும் (ஒழுக்கத்தாலும்) செய்ய வேண்டிய அனைத்தையும் “தவ” என்ற சொல்லாலேயே குறிப்பிட்டுவிட்டார். “உன் தவநெறிக்கே” என்பதனால் அதை குறித்து அபிராமிபட்டர் தான் முயற்சி செய்வதை   குறிப்பிடுகிறார்.

“நெஞ்சம் பயில நினைகின்றிலேன்”“நெஞ்சம் பயில” என்ற சொல்லானது இந்த இடத்தைப் பொறுத்தவரை மனதாலே இறையருளை பெறுவதற்கான முயற்சியையே குறிக்கிறது. மனதாலே பயிலுதலுக்கு ஒன்பது இடையூறுகளும், ஒன்பது முயற்சிகளும் உள்ளன. அந்த முயற்சியையே நெஞ்சம்பயில என்கிறார். அதை ஒவ்வொன்றாய் காண்பது இச்சொல்லின் ஆழத்தை உணர உதவியாய் இருக்கும் (கடவுளை வணங்க கண், காது, மூக்கு, செவி, மெய் போன்றவை உபாதியற்று இருக்க வேண்டும் அப்படி இருந்தால் தான் வழிபாட்டில் முழுமையாய் ஈடுபடமுடியும்) காதை கவரும் வகையில் இசை, கண்ணை கவரும் ஒளி மற்றும் வண்ணப் பொருட்கள், மூக்கை மயக்கும் வாசனை, மெய்யை கவரும் குளிர்ச்சி, சூடு வாய்க்கு இனிய அறுசுவை பண்டம், இவற்றின் வசம் மனம் சென்று தடுமாறாமல் இருக்க வேண்டும்.

கேட்க இன்னா ஒலி, உடலுக்கு சகிக்க இயலாத வியர்வை, நுகரமுடியாத வாசனை, கண்ணைத்தடுமாற வைக்கும் காணமுடியா இருட்டு, உச்சரிப்பு முதலியவையும் மனதிற்கு உள்ளே உள்ள நிறைவேறாத ஆசை, பூசனையை பற்றி அறியாத அனுபவமில்லாத மனம், பண்பு, பூசனையை விரைவாக செய்ய வேண்டிய சூழல், மனதிலே தீர்க்க முடியாத துக்கம், மனதிலே இறைவியைத் தவிர பிறவற்றினால் ஏற்படும் மகிழ்ச்சி, சாத்திரங்களை அறியாததும், பூசனை முதலியவற்றில் சிரத்தை இல்லாததும், இறைவன் மீது அச்சமில்லாததும், அலட்சியமானதும், அதிக ஆவலுடையதும் ஆன மனநிலை விலக்கத்தக்கது.

மனமானது ஆசை (காமம்), சினம் (க்ரோதம்), பற்று (லோபம்), ஆணவம் (மத), பொறாமை (மாச்சர்யம்), மயக்கம் (மோஹம்) என்று அறுவகை பகையற்றதாய் இருக்க வேண்டும். சோம்பல் (தாமசம்), வேகம் (ராஜசம்) இரு குணங்கள் இல்லாமல் இருக்க வேண்டும். பூசைக்குரிய திருமேனி சிதைந்துள்ளதாக இருக்கக்கூடாது. பொருள் குறைவுபட்டு இருப்பதனால் நொந்துகொள்ளக் கூடாது. இவை அத்துணை பண்புகளும் மனதிற்கு இயல்பாகவே இருக்கும். மேற்கண்ட இந்த ஒன்பதையும் நீக்கும் முயற்சியையே “நெஞ்சம் பயில” என்கிறார் மேலும் ஒன்பது உத்தமமான குணங்களை பெறுவதையும் நெஞ்சம் பயில என்கிறார். அவற்றை காண்போம்.

 இறைவனின் புகழை கேட்டல் (ஸ்ரவணம்) இறைவனின் புகழை பாடுவது (கீர்த்தனை) தேவாரம், திருவாசகம். இறைவனை நினைப்பது (ஸ்மரணம்) மந்திரம் சொல்லுதல், கோயிலை தூய்மை செய்தல், பூசனைக்குரிய மலர் பறித்து உதவுதல் முதலானவைகள் சேவனம் எனப்படும். திருமேனியில் (விக்ரஹம்) இறைவன் இருப்பதாக கருதி அதை குறித்து செய்யப்படும் அபிேஷகம், அலங்காரம், போன்றவை செய்வது அர்சனம்.

இறைவனை பற்றி சான்றோர்களிடத்தும், பக்தர்களிடமும் பேசுவது இறைவனுடைய அடியவர்களுக்கு உதவுவது (தாஸ்யம்) இறை அன்பர்களாகிய உபாசகர்களிடம் நட்பு கொள்வது (யோகம்) ஜபம், ஞான நூல்களை பயிலுதல் இவை ஆத்மநிவேதம் எனப்படும்.  இந்த ஒன்பது பண்புகளையும் மனம்   பெறும்படி முயற்சிப்பது “நெஞ்சம் பயில்தல்” எனப்படும். அபிராமிபட்டரோ இந்நற்பண்புகளை கொள்ளவும், முன்சொன்ன ஒன்பது தீய பண்புகளை தள்ளவும் தான் முயற்சி செய்யவில்லை என்பதை “நெஞ்சம் பயில நினைகின்றிலேன்” என்கிறார்.

(தொடரும்)

முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்

Related Stories: