கார்த்திகை தீபத்திருநாள் : வழிபாட்டு முறைகளும் பலன்களும்

ஆதியும், அந்தமும் இல்லாதவர் இறைவன் சிவபெருமான் என்பது சிவனை வழிபடும் சைவ பிரிவினரின் சித்தாந்தமாகும். நினைத்தாலே முக்தி தரும் தலமாக “திருவண்ணாமலை” இருக்கிறது. திருவண்ணாமலை கோயில் பற்றி பேசும் அனைவருக்கும் முதலில் ஞாபகம் வருவது திருவண்ணாமலை அருணாச்சல மலையில் “கார்த்திகைதீபத் திருநாள்” அன்று ஏற்றப்படும் “கார்த்திகை தீபம்” ஆகும். தமிழர்களின் முக்கிய திருநாளான கார்த்திகைதீப திருநாளின் மகத்துவம் பற்றியும், அன்று செய்ய வேண்டிய விடயங்கள் என்ன என்பதையும் இங்கு அறிந்து கொள்ளாலாம்.

புராண காலத்தில் இந்த தலத்தில் ஜோதியாக, அக்னிப்பிழம்பாக காட்சியளித்த சிவபெருமானின் அடிமுடியை காணும் முயற்சியில் மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து பூமியை குடைந்து சிவனின் அடியை காண சென்றார். படைப்பு கடவுளான பிரம்ம தேவனோ அன்னப்பறவை வடிவெடுத்து சிவனின் முடியை காண்பதற்கு உயர, உயர பறந்து கொண்டேயிருந்தார். மொத்தத்தில் விஷ்ணுவும், பிரம்மனும் சிவபெருமானின் தொடக்கத்தையும், முடிவையும் அறிய முடியாமல் தோற்றனர்.

இந்த சம்பவம் இறைவன் தொடக்கம் மற்றும் முடிவும் இல்லாதவராகவும், மனிதன் அடையக்கூடிய ஞானம் என்கிற உயரிய பேறு ஜோதி வடிவானது என்றும், அந்த ஞானத்தை அடைந்தவர்கள் பலரின் அகத்தில் இருக்கும் இருளை போக்கி, வெளிச்சத்தை தரும் ஞானஜோதி ஆவார்கள் என்கிற தத்துவத்தை பறைசாற்றுவதாக இருக்கிறது. இது தான் கார்த்திகை தீபம் கொண்டாடப்படுவதற்கான ஆன்மீக காரணமாகும். இறைவன் திருவண்ணாமலை தலத்தில் அருணாச்சல மலையுச்சியில் மிகப்பெரும் தீபம் ஏற்றப்படுகிறது.

கார்த்திகை தீபம் திருவிழா தெய்வீக முக்கியத்துவம் வாய்ந்த விழாவாகும். இந்த கார்த்திகை தீப தினத்தன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, அருகிலுள்ள சிவபெருமான் மற்றும் முருகப்பெருமான் ஆலயங்களுக்கு சென்று வழிபடுவது உங்களை அண்டியிக்கும் எத்தகைய தோஷங்களையும் போக்கும். இந்த நாளன்று மாலையில் பெண்கள் வீட்டில் விளக்கேற்றி வழிபடுவதால் வீட்டில் சகல ஐஸ்வரியங்களும் பெருகிக்கொண்டே செல்லும்.

கார்த்திகை தீப திருநாள் அன்று சரியாக 27 அகல்விளக்குகளில் தீபம் ஏற்றுவது சிறந்தது. புத்தம் புதிய அகல்விளக்குகளில் தீபம் ஏற்றுவது நல்லது. தீபத்திற்கு விளக்கெண்ணெய் அல்லது பசுநெய்யை பயன்படுத்துவது நன்மையான அதிர்வுகளை வீட்டில் உண்டாக்கும். வீட்டின் தெற்கு திசை தவிர மற்ற அணைத்து திசைகளிலும் தீபம் ஏற்றுவதால் வீட்டில் தெய்வங்களின் அருள் நிறையச் செய்யும். வீட்டின் முற்றத்தில் 4 தீபங்கள், பின்படிக்கட்டில் 4 தீபங்கள், கோலமிட்ட வாசலில் 5 தீபங்கள், திண்ணையில் 4 தீபங்கள், வாசல் நடையில் 2, மாடக்குழியில் 2, நிலைப்படியில் 2, சுவாமி படியருகே 2, சமையலறையில் 1 தீபம் மற்றும் வீட்டு வாசலுக்கு வெளியே 1தீபம் என மொத்தம் 27 தீபங்களை மேற்சொன்ன முறையில் வைக்கவேண்டும்.

வீட்டின் வாயிற்படியில் லட்சுமியின் அம்சம் நிறைந்த குத்துவிளக்கில் தீபமேற்றி வைப்பது வீட்டில் லட்சுமி கடாச்சத்தை உண்டாக்கும். வீட்டின் பூஜையறையில் அரிசிபொரியை நைவேத்தியமாக வைத்து சிவபெருமானுக்குரிய மந்திரங்களை துதித்து வழிபடுவதால் உங்களின் பாவ வினைகள் நீங்கப்பெற்று சிவபெருமானின் அருட்கடாச்சம் உங்களுக்கு கிடைத்து வாழ்வில் பல நன்மையான விடயங்கள் ஏற்பட தொடங்கும்.

Related Stories: