திருக்கோஷ்டியூர் கோயிலில் தெப்ப உற்சவம் கோலாகலம்

திருப்புத்தூர்:  திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப்பெருமாள் கோயிலில் நேற்று இரவு மாசிமக தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தெப்பக்குளத்தில் விளக்கேற்றி வழிபட்டனர். சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில் மாசிமக திருவிழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று தெப்பஉற்சவம் நடைபெற்றது. முன்னதாக, நேற்று காலை பெருமாள் ஸ்ரீதேவி, பூமிதேவியருடன் எழுந்தருளி தங்கத்தோளுக்கினியாளில் திருவீதி புறப்பாடு நடைபெற்றது.

தொடர்ந்து பெருமாள் ஸ்ரீதேவி, பூமிதேவியாருடன் தெப்பத்தில் எழுந்தருள பகல் 11.20 மணியளவில் தெப்பக்குளத்தை ஒரு சுற்று சுற்றிவந்து தெப்பம் கண்டருளல் நடைபெற்றது. தொடர்ந்து இரவு 10 மணியளவில் மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பெருமாள் ஸ்ரீதேவி, பூமிதேவியாருடன் எழுந்தருளி தெப்பக்குளத்தை மூன்று முறை சுற்றிவந்து தெப்பஉற்சவம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பெண்கள் தெப்பகுள படிக்கட்டிலும், குளத்தை சுற்றிலும் விளக்கேற்றி  வழிபட்டனர். 11ம் நாளான இன்று காலை தீர்த்தவாரி நடைபெறும். இரவு பெருமாள் தங்கத் தோளுக்கினியாளில் ஆஸ்தானத்திற்கு எழுந்தருளலும், ஆசீர்வாதமும் நடைபெறும்.

Related Stories: