கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு: மடாதிபதி மீது அமைச்சரிடம் ஊராட்சி மன்ற தலைவர் புகார்

சென்னை: சென்னை, தலைமை செயலகத்தில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவிடம், திண்டிவனம் மயிலம் ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார் அளித்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தாலுகா மயிலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான அரசுடைமை சொத்துக்கள், அரசு புறம்போக்கு நிலங்கள், நீர் நிலைகள், வாய்க்கால் ஓடை உள்ளிட்ட நீர்வழிப்பாதைகள் மற்றும் நந்தவனம் உள்ளிட்ட பொது சொத்துக்கள் சட்ட விரோதமாக அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்து அபகரிக்கப்பட்டுள்ளது. காலம், காலமாக பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு குடிநீர் மற்றும் இதர அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்பட்டு வரும் ஊர் பொதுவில் உள்ள குளம் 1.81 ஹெக்டேர் பரப்பளவில் உள்ளது சுப்பிரமணி சுவாமி தேவஸ்தான தீர்த்தகுளம் என வகைப்படுத்தப்பட்டது. 1.58 ஹெக்டேர் பரப்பளவில் அரசு புறம்போக்கும் பூந்தோட்டம் என வகைப்படுத்தப்பட்டது. அரசுக்கு சொந்தமான பொது பயன்பாட்டில் காலம், காலமாக இருந்தும் சொத்தினை மயிலம்-பொம்மபர ஆதினம் மற்றும் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் மடத்தின் தற்காலிக நிர்வாகம் என கூறிக்கொண்டு, சட்ட விரோதமாக ஆக்கிரமிப்பு செய்து சுற்றுச்சுவரை எழுப்பியுள்ளனர். இதனால் மயிலம் கோயிலுக்கு வரும் பக்தர்கள், ஊர் பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் இயல்பாக பயன்படுத்தி வந்தது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.இவ்விவகாரத்தில் ஆதினம் நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுத்து அரசு நிலத்தை மீட்டு, கிராம வளர்ச்சிக்கு வழிவகுக்க வேண்டும். 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் துணையோடு ஆக்கிரமித்து கிராம தேவையை நிறைவேற்ற வழியின்றி பஞ்சாயத்து முடங்கி இருக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு: மடாதிபதி மீது அமைச்சரிடம் ஊராட்சி மன்ற தலைவர் புகார் appeared first on Dinakaran.

Related Stories: