நாகர்கோவில், ஜூலை 18: நாகர்கோவிலில் நிதி நிறுவனத்தில் ரூ.83 லட்சம் மோசடி செய்த பணியாளர்கள் 2 பேர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஊர் மக்கள் எஸ்பியிடம் புகார் கொடுத்துள்ளனர். நாகர்கோவில் அருகே உள்ள வடக்குகோணத்தை சேர்ந்த ஊர் மக்கள் நேற்று எஸ்பி ஸ்டாலினிடம் ஒரு புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: வடக்குகோணம் ஊர் நிர்வாகம் சார்பில் நிதி நிறுவனம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிதி நிறுவனத்தில் வைப்புநிதி மற்றும் நகைக்கடன் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இங்கு பணி புரிந்த 2 பேர் வாடிக்கையாளர் சேமிப்பு கணக்கில் இருந்தும், போலி நகைகளை அடகு வைத்தும் ரூ.83 லட்சத்து 29 ஆயிரத்து 365யை கையாடல் செய்தனர். கடந்த மாதம் நடந்த தணிக்கையின்போது அவர்கள் இருவரும் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து மோசடி செய்த பணத்தை பெற்று தரவேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
The post நாகர்கோவிலில் நிதி நிறுவனத்தில் ரூ.83 லட்சம் மோசடி: பணியாளர் 2 பேர் மீது ஊர்மக்கள் புகார் appeared first on Dinakaran.
