* மீட்டுத் தருமாறு சிவகங்கை கலெக்டரிடம் பெற்றோர் கண்ணீர் மனு
காரைக்குடி: மலேசியாவிற்கு சுற்றுலா சென்ற காரைக்குடியை சேர்ந்த இரு இளைஞர்கள், அங்கு மர்மநபர்களால் கடத்தப்பட்டுள்ளனர். ரூ.26 லட்சம் பணம் கொடுக்காவிட்டால் இருவரையும் கொன்று விடுவோம். அவர்களது உடல் பாகங்களை எடுத்து விற்று விடுவோம் என்று போனில் மிரட்டல் விடுத்துள்ளதால் பரபரப்பு நிலவுகிறது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி போலீஸ் காலனி கைலாஷ் நகர் பகுதியை சேர்ந்தவர் முகமது இப்ராம்ஷா. இவரது மகன் நூர்முகமது இஸ்மாயில். இவரும், உறவினர் முகமது தாரிக்கும் கடந்த பிப். 13ம் தேதி சென்னையில் இருந்து மலேசியா பினாங்கிற்கு சுற்றுலா விசாவில் சென்றுள்ளனர்.
இவர்கள் இருவரும் கடா மாநிலம், பாடாங் சிராய் என்ற பகுதியில் ஹரிநாதன் என்பவரது வீட்டில் தங்கி இருந்துள்ளனர். இந்நிலையில், முகமது இப்ராம்ஷாவின் மூத்த மகன் ரியாசுதீன் விசா முடிந்தும் அங்கு நீண்டநாள் தங்கியிருந்ததால் கேம்பில் அடைத்துள்ளனர். இதற்கிடையே ரியாசுதீன் ரூ.26 லட்சம் பணம் தங்களுக்குத் தர வேண்டும் என கூறி, அறிமுகம் இல்லாத நபர்கள் நூர்முகமது இஸ்மாயில், முகமது தாரிக் ஆகியோரை கடத்திச் சென்றுள்ளனர்.
ரூ.26 லட்சம் பணம் கொடுத்தால் தான் விடுவிக்கமுடியும் என்றும், பணம் தரவில்லை என்றால் இருவரையும் கொன்று விடுவதாகவும், உடலில் உள்ள கிட்னி உள்ளிட்ட பாகங்களை எடுத்து விற்று விடுவோம் என்று மிரட்டியுள்ளனர். இருவரின் பாஸ்போர்ட்டை பறித்துக் கொண்டு அடித்து கொடுமைப்படுத்துவதாக தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவரது பெற்றோர், சிவகங்கையில் கலெக்டர் ஆஷா அஜித்திடம் புகார் மனு அளித்து மகனை மீட்டு தரும்படி கோரிக்கை அளித்துள்ளனர்.
கடத்தப்பட்ட நூர்முகமது, அவரது தந்தையிடம் போனில் பேசுகையில், ‘‘இங்கு எதுவும் செய்ய முடியாது. நீங்க நினைப்பது போல் கிடையாது. என்னை சுற்றி அனைவரும் அமர்ந்து உள்ளனர். நீங்கள் பேச, பேச எங்களை அடித்துக் கொடுமைப்படுத்துகின்றனர்’’ என கதறினர். அப்போது போன் மூலம், நூர்முகமதுவின் பெற்றோர் கடத்தல் நபர்களிடம் பேசுகையில், ‘‘உங்கள் பணத்திற்கு இவர்கள் இருவரும் என்ன செய்வார்கள்? இவர்களை பிடித்து வைத்து ஒரு பயனும் இல்லை.
இவர்களுக்கு சம்பந்தமும் இல்லை’’ என கூறுகின்றனர். ‘‘இவர்கள் மலேசியாவை சுற்றிப்பார்க்க வந்தவர்கள். யாரிடம் பணம் கொடுத்தீர்களோ, அவர்களிடம் கேளுங்கள்’’ என பெற்றோர் கூறுகின்றனர். அதற்கு பதில் அளித்து கடத்தல் நபர்கள் பேசுகையில், ‘‘ரியாசுதீன் தம்பியும், மச்சானும் தான் இங்கு எங்களிடம் உள்ளார்கள்’’ என கூறுகின்றனர். இதுகுறித்து கடத்தப்பட்ட நூர்முகமதுவின் சகோதரி மர்லின் பானு கூறுகையில், ‘‘எனது தம்பி நூர்முகமது இஸ்மாயில், உறவினர் முகமது தாரிக் இருவரும் சுற்றுலாவாக மலேசியா சென்றனர். சில நாட்களுக்கு முன்னர் போன் வந்தது.
அதில் மர்மநபர்கள் இவர்களை கடத்தி வைத்துள்ளதாக தெரிவித்தனர். எதற்காக கடத்தி வைத்துள்ளீர்கள் என கேட்டபோது ரூ.26 லட்சம் பணம் தர வேண்டும் என டிமாண்ட் செய்தனர். பணம் கொடுத்தால் தான் விடுவோம். இல்லாவிட்டால் கொன்று விடுவோம் என மிரட்டுகின்றனர். அவ்வளவு பணம் கொடுக்கும் வகையில் எங்களிடம் வசதியில்லை. பணம் கொடுக்காவிட்டால் உடல் பாகங்களை எடுத்து விற்பனை செய்வோம். முதலில் கிட்னியை எடுத்து விற்றுவிடுவோம் என கூறினர்.
சகோதரர் மற்றும் உறவினரை அடித்து கொடுமைப்படுத்துகின்றனர். குணா என்பவர் எங்களிடம் பேசினார். அவர்தான் கடத்தி வைத்துள்ளது போல் தகவல் வந்தது. இவர்களை மீட்க வேண்டும் என கலெக்டரிடம் மனு அளித்துள்ளோம். தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்களை மீட்டுத் தரவேண்டும். இதுபோல் சுற்றுலா செல்வோரை கடத்தி பணம் கேட்டு மிரட்டுவது தொடர்கிறது. இதுபோன்று இனிமேல் நடக்ககூடாது. எனவே முதல்வர், பிரதமர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
The post மலேசியாவுக்கு சுற்றுலா சென்ற காரைக்குடி வாலிபர்கள் கடத்தல்ரூ.26 லட்சம் கேட்டு அடித்து சித்ரவதை ; கொலை செய்வதாக மிரட்டல் appeared first on Dinakaran.