தர்பூசணி பழங்களில் எந்த ரசாயனமும் இல்லை: சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தர்பூசணி பழங்களை ஆய்வு செய்ததில் எந்த ரசாயனமும் செலுத்தப்படவில்லை என்று கண்டறியப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தர்பூசணி பழங்களின் நிறத்துக்கும், சுவைக்கும் ஊசி மூலம் ரசாயனம் செலுத்தப்படுவதாகக் கூறி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திய உணவு பாதுகாப்பு துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி செங்கல்பட்டு விவசாய நலச் சங்கத்தின் தலைவர் வெங்கடேசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன்புவிசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசு தரப்பில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தர்பூசணி பழங்களை ஆய்வு செய்ததில் எந்த ரசாயனமும் பழங்களில் செலுத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, மனுதாரர் கூறும் குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளிக்குமாறு உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ்குமாருக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 9ம் தேதிக்கு தள்ளிவைத்தார். மேலும், தர்பூசணி விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை ஈடு கட்டும் வகையில், தர்பூசணி பழங்களில் எந்த ரசாயன மருந்தும் சேர்க்கப்படவில்லை என்று மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைத்து ஊடகங்களிலும் விளம்பரம் கொடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

The post தர்பூசணி பழங்களில் எந்த ரசாயனமும் இல்லை: சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: