வயல்வெளியில் அமைக்கப்பட்ட கம்பிவேலியில் மின்சாரம் பாய்ந்து 2 குழந்தை-பாட்டி பலி

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே ஆண்டாபுரத்தை சேர்ந்தவர் செல்வம் (60). இவரது மனைவி இளஞ்சியம்(50). இவர்களின் மகன் அருள்(35). இவருக்கு சுஜித் (5) என்ற மகன், ஐவிழி(3) என்ற மகள் இருந்தனர். செல்வம், அதே பகுதியை சேர்ந்த மணி என்பவருக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து, அதில் பருத்தி மற்றும் சோளம் சாகுபடி செய்துள்ளார். நேற்று காலை, செல்வம் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு சென்று விட்டார்

மதியம் 2 மணியளவில், இளஞ்சியம் பேரன், பேத்தியுடன் கணவருக்கு சாப்பாடு கொண்டு சென்றார். அங்கு வயலையொட்டி ஒரு மின்கம்பமும், அதன் அருகே இரும்பு கம்பி வேலியும் உள்ளன. இந்த மின்கம்பத்தில் இருந்து சர்வீஸ் வயர் மூலம் மின்கசிவு ஏற்பட்டு, இரும்பு கம்பி வேலியில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது. இதை அறியாமல், வரப்பு மீது நடந்து சென்ற குழந்தைகள் சுஜித், ஐவிழி ஆகிய இருவரும், அந்த இரும்பு கம்பி வேலியை பிடித்துள்ளனர்.

அப்போது, அவர்களின் உடலில் மின்சாரம் பாய்ந்ததில் 2 குழந்தைகளும் அலறி துடித்தனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த இளஞ்சியம், ஓடிச்சென்று குழந்தைகளை காப்பாற்ற முயன்றார். அப்போது, அவரது உடலிலும் மின்சாரம் பாய்ந்ததில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு, உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதை பார்த்த செல்வம் கண்ணீர் விட்டு கதறி அழுதார். இதுகுறித்து மோகனூர் போலீசார் வழக்குபதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வயல்வெளியில் அமைக்கப்பட்ட கம்பிவேலியில் மின்சாரம் பாய்ந்து 2 குழந்தை-பாட்டி பலி appeared first on Dinakaran.

Related Stories: