விசாரணை இறுதி கட்டத்தில் இருந்த நிலையில் வேறு நீதிமன்றத்திற்கு விசாரணையை மாற்ற முடியுமா..? அமைச்சர் பொன்முடி வழக்கில் நீதிபதி சரமாரி கேள்வி

சென்னை: கடந்த 1996-2001ம் ஆண்டுகளில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் ஒரு கோடியே 36 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து குவித்ததாக, 2002 அதிமுக ஆட்சியில் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு பின்னர் வேலூர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்புக்கு எதிராக உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்திருந்தார். வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அமைச்சர் பொன்முடி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, வழக்கை வேலூர் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் எந்த கோரிக்கையும் வைக்கப்படாத நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்களின் விளக்கத்தை கேட்காமல் வழக்கு மாற்றப்பட்டது. ஏற்கனவே 70 சதவீதம் விசாரணை முடிக்கப்பட்ட வழக்கில் மீதி விசாரணையை மேற்கொண்டதாகவும், 5 நாட்களில் தீர்ப்பளிக்கப்படவில்லை எனவும் வேலூர் நீதிமன்ற நீதிபதி மனு தாக்கல் செய்துள்ளார் என்று வாதிட்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, ஒரு மாவட்டத்தில் உள்ள வழக்கை அந்த மாவட்டத்தின் நிர்வாக நீதிபதிகள், வேறு மாவட்டத்திற்கு மாற்ற முடியுமா? அனைத்து நீதிபதிகள் அடங்கிய குழு முன் வைக்காமல், தலைமை நீதிபதி, வழக்கை வேறு மாவட்டத்திற்கு மாற்ற ஒப்புதல் வழங்க முடியுமா என்பது குறித்து அட்வகேட் ஜெனரல் மற்றும் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் விளக்கம் தரவேண்டும். வழக்கை வேறு மாவட்டத்திற்கு மாற்ற முடியும் என்றால் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த இந்த வழக்கில் மேற்கொண்டு எந்த விசாரணையும் நடத்த முடியாது. ஐந்து நாட்களில் தீர்ப்பளித்தார் என்பதற்காக அந்த தீர்ப்பை ரத்து செய்ய முடியாது என்று கூறி விசாரணையை வரும் 17ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

The post விசாரணை இறுதி கட்டத்தில் இருந்த நிலையில் வேறு நீதிமன்றத்திற்கு விசாரணையை மாற்ற முடியுமா..? அமைச்சர் பொன்முடி வழக்கில் நீதிபதி சரமாரி கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: