மொளச்சூர் ஊராட்சியில் உள்ள அரசு பள்ளிக்கு கல்வி சீர்வரிசை

 

ஸ்ரீபெரும்புதூர், ஏப்.5: மொளச்சூர் அரசு தொடக்கப்பள்ளிக்கு கல்வி சீர்வரிசை பொருட்களை, கிராம மக்கள் ஊர்வலமாக எடுத்து வந்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் வழங்கினர். ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், மொளச்சூர் ஊராட்சியில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில், 1 முதல் 5ம் வகுப்பு வரை 100க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த, பள்ளியின் 93வது ஆண்டு விழாவை முன்னிட்டு, பள்ளியை மேம்படுத்தும் வகையில் கல்வி சீர் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இதில், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் இணைந்து, ரூ.50 ஆயிரம் மதிப்பில் பள்ளிக்கு தேவைப்படும் நோட்டு, புத்தகம், பென்சில், பேனா, பீரோ, நாற்காலிகள், குடிநீர் கேன்கள், மின்விசிறி, குக்கர் உள்ளிட்ட 40 வகையான பள்ளி உபகரணங்களை மேள, தாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு சென்று, பள்ளி தலைமை ஆசிரியர் இருதயராஜிடம் வழங்கினர். இந்நிகழ்ச்சியில், மொளச்சூர் ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா, துணை தலைவர் ரஞ்சினி ஆலிஸ் ஜெரால்ட், கல்வி மேலாண்மை குழு தலைவர் நதியா ரபிக் அகமது உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post மொளச்சூர் ஊராட்சியில் உள்ள அரசு பள்ளிக்கு கல்வி சீர்வரிசை appeared first on Dinakaran.

Related Stories: