இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் என்.செந்தில்குமார் அடங்கிய அமர்வு, விசாரணையில் இருந்து விலகியது. இதையடுத்து, வழக்கை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவுக்கு பதில் அளிக்க தமிழக அரசுக்கு அவகாசம் வழங்கிய நீதிபதிகள், விசாரணையை வரும் 8ம் தேதிக்கு தள்ளி வைத்திருந்தனர்.
இந்நிலையில், நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தலைமையிலான அமர்வில் இடம் பெற்றிருக்கும் நீதிபதி கே.ராஜசேகர், அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞரின் சகோதரர் என்பதால், தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கின் விசாரணையை வேறு அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன், தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் தலைமையிலான அமர்வில் நேற்று முறையீடு செய்தார். இதைக்கேட்ட தலைமை நீதிபதி அமர்வு, இது சம்பந்தமாக நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தலைமையிலான அமர்வில் முறையிடுங்கள். அந்த அமர்வு எடுக்கும் முடிவின் அடிப்படையில் நிர்வாக உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்தனர்.
The post டாஸ்மாக்கில் ஈ.டி சோதனையை எதிர்த்த வழக்கை வேறு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றக்கோரி முறையீடு appeared first on Dinakaran.