4800 பேருக்கு வேலைவாய்ப்பு காஞ்சி வையாவூர் கிராமத்தில் புதிய தொழிற்பேட்டை

சென்னை: தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் சார்பில் ரூ.133.32 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் சார்பில், ரூ.57.72 கோடி செலவில் சேலம் மாவட்டம், அரியகவுண்டம்பட்டியில் அடுக்குமாடி வெள்ளி கொலுசு உற்பத்தி வளாகம், கோயம்புத்தூர் மாவட்டம் குறிச்சி சிட்கோ தொழிற்பேட்டையில் தொழிலாளர்கள் தங்கும் விடுதி, காஞ்சிபுரம், கடலூர், திருவாரூர், சேலம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் 170.21 ஏக்கர் பரப்பில் ரூ.40.27 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள 5 தொழிற்பேட்டைகள் மற்றும் சேலம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, கோயம்புத்தூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ரூ.35.33 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள 5 பொது வசதி மையங்கள் ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம், வையாவூர் தொழிற்பேட்டை: காஞ்சிபுரம் வட்டம், வையாவூர் கிராமத்தில் 42.06 ஏக்கர் பரப்பளவில் புதிய தொழிற்பேட்டை அமைக்கப்பட்டுள்ளது. இத்தொழிற்பேட்டை 42.06 ஏக்கரில் ரூ.27.47 கோடி செலவில் 115 தொழில்மனைகள் மேம்படுத்தப்பட்டு தொழில் முனைவோர்களுக்கு ஒதுக்கீடு செய்ய தயாராக உள்ளது. இத்தொழிற்பேட்டை உருவாக்கத்தின் மூலம் சுமார் 1800 நபர்கள் நேரடியாகவும், 3000 நபர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுவர். இந்த நிகழ்ச்சியில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், தலைமைச் செயலாளர் முருகானந்தம், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் அதுல் ஆனந்த், தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post 4800 பேருக்கு வேலைவாய்ப்பு காஞ்சி வையாவூர் கிராமத்தில் புதிய தொழிற்பேட்டை appeared first on Dinakaran.

Related Stories: