நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேர் கைது

ராமேஸ்வரம்: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியாக தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு வருகின்றனர். மீனவர்கள் கைது செய்யப்படுவதோடு அவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது.

இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டு வருகிறது. இந்த கைது நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர் சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன.

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள், மீன்பிடி துறைமுகத்தில் இருந்து உரிய அனுமதிச் சீட்டு பெற்று விசைப்படகுகளில் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர். மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி மீனவர்கள் 11 பேரை கைது செய்தனர்.

மேலும் ஒரு விசைப்படகையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவம் சக மீனவர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: