அனைவரும் ஒன்றுபட்டு போராடினால்தான் வெற்றி பெற முடியும் நியாயமான தொகுதி மறுசீரமைப்பை அடையும் வரை இணைந்து போராடுவோம்: ‘கூட்டு நடவடிக்கை குழு’ கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

சென்னை: ஒற்றுமை உணர்வோடு அனைவரும் ஒன்றுபட்டு போராடினால்தான் வெற்றி பெற முடியும். நியாயமான தொகுதி மறுசீரமைப்பை அடையும் வரை நாம் இணைந்து போராடுவோம் என்று 4 முதல்வர்கள், 2 துணை முதல்வர் உள்ளிட்ட 14 தேசிய கட்சிகள் பங்கேற்ற கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியுடன் கூறினார். தொகுதி மறுவரையறைக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு மாநிலத்தில் இருக்கும், ஆட்சி செய்யும் ஒரு கட்சியின் அழைப்பினை ஏற்று இத்தனை இயக்கங்கள், கட்சிகள் வந்திருப்பது இக்கூட்டத்தின் மாபெரும் சிறப்பு.

இந்திய ஜனநாயகத்தை காக்க நாம் அனைவரும் ஓரணியில் திரண்டிருக்கிறோம் என்பதை இந்தியாவுக்கு உணர்த்துவதாக உங்களது வருகை அமைந்திருக்கிறது. இந்திய கூட்டாட்சியை காக்கும் வரலாற்றில் மிகமிக முக்கியமான நாளாக இந்த நாள் அமையப்போகிறது. மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பு என்பது, நம்மை போன்ற மாநிலங்களை வெகுவாக பாதிக்கப்போகிறது. மக்கள்தொகையை பல்வேறு சமூகநலத் திட்டங்கள் மூலமாக கட்டுப்படுத்திய நம்மை போன்ற மாநிலங்கள், அதன் காரணமாக நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையில் நமது பிரதிநிதித்துவத்தை அதிகம் இழக்க நேரிடும்.

எனவேதான் இதனை நாம் கடுமையாக ஆணித்தரமாக எதிர்க்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். தற்போதைய மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதில் நாம் அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும். இங்கே இருக்கும் ஒவ்வொரு மாநிலமும், மக்கள்தொகை கட்டுப்பாட்டின் மூலம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை காட்டியுள்ளன. இத்தகைய மாநிலங்களை தண்டிப்பதாக இந்த நடவடிக்கை இருக்கப் போகிறது. மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை குறைவதன் மூலமாக நமது எண்ணங்களை சொல்வதற்கான வலிமை குறைகிறது.

இரண்டு ஆண்டு காலமாக மணிப்பூர் மாநிலம் பற்றி எரிகிறது. ஆனால் நீதிக்கான அவர்களின் குரல்கள் புறக்கணிக்கப்படுகின்றன. ஏனென்றால் நாட்டின் கவனத்தை ஈர்க்க அவர்களுக்கு அரசியல் வலிமை இல்லை. எனவே, நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறைவது அல்லது நமது பிரதிநிதித்துவம் குறைவது என்பதை நம்முடைய அரசியல் வலிமையை குறைப்பதாகத்தான் பார்க்க வேண்டும். இது வெறும் எண்ணிக்கையை பற்றியது மட்டுமல்ல – இது நமது அதிகாரம், நமது உரிமைகள் மற்றும் நமது எதிர்காலத்தின் நலன்களை பற்றியது.

பிரதிநிதித்துவம் குறைந்து வருவதால், நமது மாநிலங்கள் நமக்கு தேவையான நிதியை பெறுவதற்கு கூட போராட வேண்டி வரும். நமது விருப்பம் இல்லாமல் நமக்கான சட்டங்கள் வடிவமைக்கப்படும். நமது மக்களை பாதிக்கும் முடிவுகள், நம்மை அறியாதவர்களால் எடுக்கப்படும். பெண்கள் அதிகாரம் அடைவதில் பின்னடைவுகளை சந்திப்பார்கள். மாணவர்கள் முக்கிய வாய்ப்புகளை இழப்பார்கள். உழவர்கள் ஆதரவின்றி பின்தங்குவார்கள். நமது பண்பாடு, அடையாளம் மற்றும் முன்னேற்றம் ஆபத்தை சந்திக்கும்.

காலம் காலமாக நாம் போற்றி பாதுகாத்து வரும் சமூகநீதி பாதிக்கப்படும். குறிப்பாக பட்டியலின, பழங்குடி மக்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்க அனுமதித்தாலோ அல்லது நமது மாநில பிரதிநிதித்துவத்தை குறைக்க அனுமதித்தாலோ, நம் சொந்த நாட்டில் நாமே அரசியல் அதிகாரம் இழந்த குடிமக்களாக மாறும் அபாயம் உள்ளது. எனவேதான், தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை சாதாரணமாக கருதக் கூடாது.

ஜனநாயக பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்தும் எந்தவொரு நடவடிக்கையையும் நாம் எதிர்க்கவில்லை. ஆனால் அந்த நடவடிக்கையானது, நியாயமான அரசியல் பிரதிநிதித்துவத்தை பாதிக்கக்கூடாது என்றுதான் சொல்கிறோம். இந்த போராட்டம் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரானது அல்ல; இந்த போராட்டம் நியாயமான தொகுதி மறுசீரமைப்பை வலியுறுத்துகிறது என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். இதனை உணர்ந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக்கட்சிகளின் கூட்டத்தை நான் கூட்டினேன்.

நமது அரசியல்ரீதியான எதிர்ப்பை சட்டபூர்வமாக எப்படி நடத்துவது என்பது குறித்து அனைவரும் ஆலோசனைகளை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அரசியல் மற்றும் சட்ட நடவடிக்கைகளை வரையறுப்பதற்காக வல்லுநர்களின் குழுவை அமைக்க முன்மொழிகிறேன். ஒற்றுமை உணர்வோடு அனைவரும் ஒன்றுபட்டு போராடினால்தான் வெற்றி பெற முடியும்.

எந்த சூழலிலும் நமது பிரதிநிதித்துவம் குறையக் கூடாது; குறையவிடக் கூடாது என்ற உறுதியோடு போராடுவோம். நியாயமான தொகுதி மறுசீரமைப்பை அடையும் வரை நாம் இணைந்து போராடுவோம். எங்களது அழைப்பை ஏற்று வந்துள்ள மாநில முதல்வர்கள், துணை முதல்வர்கள், அரசியல் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் மீண்டும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.

* மாநில உரிமைகளை பறிக்கிற கட்சி பா.ஜ
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘‘தமிழ்நாடு மற்றும் பிற தென்மாநிலங்கள் விகிதாச்சார அடிப்படையில் நாடாளுமன்ற இடங்களை இழக்காது’’ என்கிறார். உள்துறை அமைச்சரின் விளக்கம் தெளிவாக இல்லை, குழப்பமாகத்தான் இருந்தது. 2023ம் ஆண்டு தெலங்கானா மாநிலத்தில் பரப்புரை செய்ய வந்த பிரதமர் மோடி, “சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி மக்கள்தொகை அடிப்படையில் சமூகங்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி சொல்கிறது.

அடுத்ததாக தொகுதி மறுவரையறை நடக்க உள்ளது. காங்கிரஸ் கட்சி சொல்வதை போல மக்கள் தொகையின் அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டால், தென் மாநிலங்கள் 100 தொகுதிகளை இழக்க நேரிடும். தென்னிந்திய மக்கள் இதனை ஏற்பார்களா?” என்று கேட்டார் பிரதமர். இதனடிப்படையில் பார்த்தால், தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்பதை அவரே ஒப்புக் கொண்டுள்ளார் என்பதை உணரலாம்.

எப்போதும் மாநிலங்களை, மாநில உரிமைகளை பறிக்கிற கட்சியாக பாஜ இருந்துள்ளது. அவர்கள் தங்களது உள்நோக்கத்தை தொகுதி மறுசீரமைப்பு திட்டத்தில் செய்ய நினைக்கிறார்கள். இதனை எந்த மாநிலமும் அனுமதிக்கக் கூடாது. இந்த அச்சுறுத்தலை உணர்ந்து, முன்னெப்போதும் இல்லாத ஒற்றுமையுடன் தமிழ்நாடு செயல்பட்டு வருகிறது. இதே ஒற்றுமையை இந்த அரங்கிலுள்ள அனைத்து மாநிலங்களும் காட்ட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

* பாரம்பரிய பொருட்கள் அடங்கிய பரிசுப்பெட்டகம்
தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், பஞ்சாப் முதல்வர் பகவந்த்சிங் மான், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி உள்பட 7 மாநிலங்களில் இருந்து கட்சி நிர்வாகிகள் 24 பேர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் கூட்டத்தில் கலந்துகொண்ட விருந்தினர்களுக்கு, தமிழ்நாட்டின் அடையாளங்களாக விளங்கும், புவிசார் குறியீடு பெற்ற பொருட்களான பத்தமடை பாய், தோடர்களின் சால்வை, காஞ்சிபுரம் கைத்தறி பட்டுப்புடவை, ஊட்டி வர்க்கி, கன்னியாகுமரி கிராம்பு, கோவில்பட்டி கடலை மிட்டாய், ஈரோடு மஞ்சள், கொடைக்கானல் பூண்டு ஆகிய தமிழ்நாட்டின் சிறப்பு வாய்ந்த பொருட்கள் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரித்த அழகிய பெட்டியில் அடுக்கப்பட்டு பரிசாக வழங்கப்பட்டது.

* தாய்மொழிக்கு முக்கியத்துவம்
மக்களவை தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் மாநில மொழிகளில் பெயர்ப்பலகை இடம்பெற்றிருந்தது. இதன்படி அந்தந்த மாநிலங்களின் தாய்மொழியுடன் ஆங்கிலத்திலும் தலைவர்களின் பெயர் பலகை இடம் பெற்றிருந்தது. மேலும் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் ஆங்கிலம், தமிழ், மலையாளம், இந்தி, பஞ்சாபி ஆகிய 5 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்ய மொழிபெயர்ப்பு கருவியும் வைக்கப்பட்டிருந்தது.

* இந்த நாள் வரலாற்றில் பொறிக்கப்படும்
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: நமது நாட்டின் வளர்ச்சிக்கு பங்களித்த மாநிலங்கள் நியாயமான தொகுதி மறுசீரமைப்பை உறுதி செய்வதன் மூலம் அதன் கூட்டாட்சி கட்டமைப்பைப் பாதுகாக்க ஒன்றிணைந்த நாளாக இன்று வரலாற்றில் பொறிக்கப்படும். நியாயமான தொகுதி மறுசீரமைப்பிற்கான நமது உறுதிப்பாட்டில் ஒன்றுபட்ட அனைத்து முதல்-மந்திரிகளையும், அரசியல் தலைவர்களையும் இந்த கூட்டத்திற்கு அன்புடன் வரவேற்கிறேன். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

The post அனைவரும் ஒன்றுபட்டு போராடினால்தான் வெற்றி பெற முடியும் நியாயமான தொகுதி மறுசீரமைப்பை அடையும் வரை இணைந்து போராடுவோம்: ‘கூட்டு நடவடிக்கை குழு’ கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி appeared first on Dinakaran.

Related Stories: