பெரியார் குறித்து சர்ச்சை பேச்சால் பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் ஒன்றாக இணைக்க கோரிய சீமான் மனு தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பல்வேறு காவல்நிலையங்களில் பதிவான வழக்குகளை ஒன்றாக இணைத்து விசாரிக்க கோரி சீமான் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலுார் மாவட்டம், வடலுாரில் கடந்த ஜனவரி மாதம் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தார். இதுதொடர்பாக சீமானுக்கு எதிராக தி.க உள்ளிட்ட பல கட்சிகளால் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகார்களின் அடிப்படையில், சீமான் மீது கடலுார், கோவை, சேலம், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில், 50க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளை எல்லாம் ஒன்றாக இணைத்து விசாரிக்க உத்தரவிட கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், சீமான் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது எந்தெந்த காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

அது குறித்த எப்.ஐ.ஆர்., எங்கே என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், எப்.ஐ.ஆர்., எனும் முதல் தகவல் அறிக்கைகள் அனைத்தும் முடக்கப்பட்டு உள்ளன என்று பதிலளித்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, எந்த காவல் நிலைத்தில் எந்த வழக்கு தொடரப்பட்டது. எப்ஐஆர் உள்ளிட்ட தகவல்கள் எதுவும் இல்லாமல் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளதால், இதன் மீது எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும் என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

The post பெரியார் குறித்து சர்ச்சை பேச்சால் பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் ஒன்றாக இணைக்க கோரிய சீமான் மனு தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: