கெனாவரெல்: சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து சுனிதா, வில்மோர் மார்ச் 18-ல் பூமிக்கு திரும்புகின்றனர் என நாசா அறிவித்துள்ளது. இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வௌி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் சர்வதேச விண்வௌி நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ள கடந்தாண்டு ஜூன் 5ம் தேதி 10 நாள் பயணமாக விண்வௌிக்கு சென்றனர். அந்த விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவர்கள் இருவரும் 10 மாதங்களாக பூமிக்கு திரும்ப முடியாத சூழல் நிலவுகிறது.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அண்மையில் “நாங்கள் உங்கள் மீது அன்பு வைத்துள்ளோம். உங்களை அழைத்து செல்ல நாங்கள் மேலே வருகிறோம். நீங்கள் திரும்பி வருவதற்கான நாள்கள் வெகுதொலைவில் இல்லை” என்று கூறியிருந்தார். இந்நிலையில் இருவரையும் மீட்பதற்காக அமெரிக்காவின் நாசா – எலான்மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் இரண்டும் இணைந்து விண்கலம் ஒன்றை அனுப்பி உள்ளது. க்ரூ – 10 என்ற சர்வதேச விண்வௌி பயணத்தின் ஒருபகுதியாக ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் என பெயரிடப்பட்ட விண்கலம் பால்கன் – 9 என்ற ராக்கெட்டில் விண்வெளிக்கு ஏவப்பட்டது.
அமெரிக்காவின் கென்னடி விண்வௌி மையத்தில் இருந்து இந்திய நேரப்படி நேற்று அதிகாலை 4.33 மணிக்கு ஏவப்பட்ட இந்த விண்கலத்தில் மெக்லைன், நிக்கோல் அயர்ஸ், டகுயா ஒனிஷி மற்றும் கிரில் பெஸ்கோவ் ஆகிய வீரர்கள் சென்றுள்ளனர். இந்த வீரர்கள் நேற்று அதிகாலை 9.40 மணிக்கு சர்வதேச விண்வௌி மையத்தை சென்றடைந்தனர். இதைத்தொடர்ந்து இந்த நான்கு விண்வௌி வீரர்களும் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் செய்து வரும் ஆய்வு பணிகளை தொடர உள்ளனர். சர்வதேச விண்வௌி நிலையத்தை சென்றடைந்த 4 வீரர்களும், சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோரை சந்தித்து தங்கள் மகிழ்ச்சியை வௌிப்படுத்தி கொண்டனர்.
இந்த நிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து சுனிதா, வில்மோர் மார்ச் 18-ல் பூமிக்கு திரும்புகின்றனர் என நாசா அறிவித்துள்ளது. இது தொடர்பாக நாசா வெளியிட்டுள்ள அறிக்கையின் படி விண்வெளி வீரர்கள் நாளை உள்ளூர் நேரப்படி மாலை 5.57 மணிக்கு (இந்திய நேரப்படி மார்ச் 19-ம் தேதி அதிகாலை 3.27 மணி) ஃபுளோரிடா கடற்பகுதி அருகே தரையிறங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
The post சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து சுனிதா, வில்மோர் மார்ச் 18-ல் பூமிக்கு திரும்புகின்றனர்: நாசா அறிவிப்பு appeared first on Dinakaran.