வேகம் காட்டும் கூட்டணி கட்சிகள் : திமுக பேச்சுவார்த்தை குழுவிடம் விருப்பமான தொகுதிகள் பட்டியலை வழங்கியது சிபிஐ, மமக கட்சிகள்!!

சென்னை : திமுக பேச்சுவார்த்தை குழுவிடம் விருப்பமான 10 தொகுதிகளின் பட்டியலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வழங்கியது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவிருக்கிறது. மே.4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள், தொகுதிப் பங்கீடுகள் என்று பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றன.திமுகவில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள், மதிமுகவுக்கு 4, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 2, கொமதேகவுக்கு 2 தொகுதிகள், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தேர்தலில் போட்டியிட தங்களுக்கு சாதகமான 10 தொகுதிகள் அடங்கிய பட்டியலை திமுக பேச்சுவார்த்தை குழுவிடம் அளித்தது CPI. நாகை, வால்பாறை, தொண்டாமுத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், திருப்பூர், பவானி சாகர், பழனி, சிவகங்கை, தளி, திருத்துறைப்பூண்டி ஆகிய தொகுதிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. கடந்த முறை போட்டியிட்டு வென்ற தளி, திருத்துறைப்பூண்டி தொகுதிகளை மீண்டும் ஒதுக்க இந்திய கம்யூனிஸ்ட் கோரிக்கை விடுத்துள்ளது. 2021ல் போட்டியிட்ட திருப்பூர் (வடக்கு), பவானிசாகர், சிவகங்கை, வால்பாறை தொகுதிகளையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுள்ளது.

இதே போல், தேர்தலில் தங்களுக்கு சாதகமான 6 தொகுதிகள் அடங்கிய பட்டியலை திமுக பேச்சுவார்த்தை குழுவிடம் அளித்தது மனிதநேய மக்கள் கட்சி. பாபநாசம், இராமநாதபுரம், திருவாடனை ஆம்பூர், பாளையங்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய 6 தொகுதிகளில் இரண்டை ஒதுக்கீடு செய்ய கோரிக்கை விடுத்துள்ளது. மனிதநேய மக்கள் கட்சி கடந்த 2021 தேர்தலில் பாபநாசம், மணப்பாறை ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டது. இரண்டு தொகுதிகளிலுமே திமுகவின் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட்டது. வெற்றியும் பெற்றது.

Related Stories: