எடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.மணி திடீர் சந்திப்பு

சேலம்: சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் பாமக கவுரவத்தலைவர் ஜி.கே.மணி சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நேற்று முன்தினம் இரவு சேலம் வந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் அவர், நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டில் தங்கியுள்ளார். இந்நிலையில் அங்கு நேற்று காலை 11 மணி அளவில் பாமக கவுரவத்தலைவர் ஜி.கே.மணி வந்தார். இருவரும் 30 நிமிடம் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு அதிமுகவுடன் பாமக கூட்டணி சேரும் வகையில் இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது அதிமுகவுடன் பாமக கூட்டணி சேர்ந்து போட்டியிட்டது.

நாடாளுமன்ற தேர்தலின்போது, ராமதாஸ் அதிமுகவுடன் கூட்டணி சேர விரும்பினார். ஆனால் அன்புமணி, பாஜவுடன் கூட்டணி சேர்ந்தே ஆகவேண்டும் என்று நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதன்காரணமாக கடைசி நேரத்தில் பாமக, பாஜவுடன் கூட்டணி சேர்ந்தது. இந்நிலையில் சமீபத்தில் கட்சி நிர்வாகிளிடம் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், கூடா நட்புகேடாக முடிந்ததாக கூறியுள்ளார். இதனால் இம்முறை அதிமுகவுடன் கூட்டணி சேர அவர் விரும்புவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.மணியின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறுகிறார்கள். அதே நேரத்தில் அவரது மைத்துனரின் மகனுக்கு திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்றதாக பாமகவினர் கூறினர். இதை தொடர்ந்து மாஜி அமைச்சரான வேலுமணி, எடப்பாடி பழனிசாமியை சந்தித்து நீண்டநேரம் பேசினார்.

The post எடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.மணி திடீர் சந்திப்பு appeared first on Dinakaran.

Related Stories: