ரூ.1 கோடி செலவில் கோட்டை முன்பு பிரமாண்டமாக மாநில விலங்கு வரையாடு சின்னம்: மாநகராட்சி சார்பில் விரைவில் டெண்டர்

சென்னை கோட்டை முன்பு பிரமாண்ட முறையில் மாநில விலங்கு வரையாடு சின்னம் அமைக்கப்படவுள்ளது. “வரையாடு ” என்று மக்களால் பரவலாக அழைக்கப்படும் “நீலகிரி வரையாடு” என்பது மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படும் அழிந்து வரும் இனமாகும். இது புவிஈர்ப்பு விசைக்கெதிராக கடினமான குன்றின் மீது ஏறும் திறன்களுக்காக புகழ் பெற்றது. இந்த மலை ஆடுகளை “மவுண்டன் மோனார்க்” என்று அழைக்கிறார்கள். 2000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் சங்க இலக்கியங்களில் நீலகிரி வரையாட்டைப் பற்றிய பல குறிப்புகள் உள்ளன.

சங்க காலத்தின் ஐம்பெரும் காப்பியங்களில், சிலப்பதிகாரம் மற்றும் சீவக சிந்தாமணியில், நீலகிரி வரையாடு மற்றும் அதன் வாழ்விடம் பற்றிய விளக்கங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், பதினெண்மேல்கணக்கு நூல்களான நற்றிணை, ஐங்குறுநூறு, பரிபாடல், பதிற்றுப்பத்து, பட்டினப்பாலை போன்ற நூல்களில் நீலகிரி வரையாடு பற்றி விளக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது. கி.பி 1600-1700-இல் திரிகூடராசப்பக் கவிராயரால் எழுதப்பட்ட குற்றாலக் குறவஞ்சி என்ற நாடகத்தில் நீலகிரி வரையாடு குறித்து “குறத்தி மலை வளம் கூறல்” என்ற பாடலில் விவரிக்கப்பட்டுள்ளது.

வரையாடு இப்பகுதியின் பல்லுயிர் செழுமையைக் குறிக்கும் விலங்குகளில் ஒன்றாகும். தமிழகத்தில் அதன் சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சார முக்கியத்துவத்துக்கு சான்றாக, நீலகிரி வரையாடு தமிழகத்தின் மாநில விலங்காக அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி வரையாடு திட்டமானது, நீலகிரி வரையாடு பற்றிய எண்ணிக்கை, விநியோகம் மற்றும் சூழலியல் பற்றிய சிறந்த புரிதலை உருவாக்குதல்; நீலகிரி வரையாட்டின் வரலாற்று வாழ்விடங்களை மீண்டும் அறிமுகப்படுத்துதல்; நீலகிரி வரையாட்டுக்கு உள்ள அச்சுறுத்தலை நிவர்த்தி செய்தல்; “”நீலகிரி வரையாடு” இனங்கள் பற்றிய விழிப்புணர்வை பொது மக்களிடையே அதிகரிக்கச் செய்தல்;

நீலகிரி வரையாடு தினம் – 1975 இல் நீலகிரி வரையாடு பற்றிய முதல் ஆய்வுகளில் முன்னோடியாக இருந்த டாக்டர் ஈ.ஆர்.சி டேவிதாரின் பிறந்த நாளான அக்டோபர் 7 ஆம் நாள் நீலகிரி வரையாடு தினமாக அவரை சிறப்பிக்கும் வகையில் கொண்டாடப்பட்டு வருகிறது.“நீலகிரி வரையாடு” உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் சுற்றுச்சூழல் சுற்றுலா நடவடிக்கைகளை உருவாக்குதல்; பள்ளி மாணவர்களுக்கு நீலகிரி வரையாடு குறித்த பாடங்களை உருவாக்குதல் ஆகிய நோக்கங்களைக் குறிக்கும் வகையில் டிசம்பர், 2022ல் அரசாணை வெளியிடப்பட்டது.

மேலும், இந்தத் திட்டம் மூலம் ரூ.25 கோடி செலவில், நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கை, பரவல் மற்றும் சூழலியியல் பற்றிய சிறந்த புரிதலை மேம்படுத்துதல், வரையாடுகளின் வரம்பு முழுவதும் தரப்படுத்தப்பட்ட முறைகளை பயன்படுத்தி ஒத்திசைக்கப்பட்ட கணக்கெடுப்புகள் நடத்துதல், நீலகிரி வரையாட்டினை மறு அறிமுகம் செய்தல் மற்றும் கண்காணிப்பு, பாதிக்கப்பட்ட வரையாடுகளுக்கு நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை அளித்தல், பணியாளர்களுக்கு கள உபகரணங்கள் மற்றும் பயிற்சி அளித்தல், மேல் பவானியில் உள்ள சோலா புல்வெளியில் முன்னோடியான மறுசீரமைப்பு பணி மேற்கொள்ளுதல், சூழல் – சுற்றுலா திட்டங்களை செயல்படுத்துதல், தகவல் தொடர்பு மற்றும் எல்லை போன்றவை குறித்த முக்கிய நடவடிக்கைகளில் தமிழ்நாடு அரசு கவனம் செலுத்தி வருகிறது.

இந்நிலையில், முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில், சென்னை கோட்டை முன்பு உள்ள இடத்தில் தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாடு சிலை நிறுவப்படவுள்ளது. இதனை சென்னை மாநகராட்சி கட்டமைக்கவுள்ளது. இந்த சிலையானது சுமார் 28 அடி உயரத்தில், ரூ.1 கோடி செலவில் பிரமாண்ட முறையில் அமைக்கப்படவுள்ளது. இதற்கான டெண்டர் ஒரிரு வாரங்களில் இறுதி செய்யப்பட்டு, ஒரு மாதத்தில் பணிகளை முடிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாடுக்கென சிலை அமைப்பது என்பது பாராட்டத்தக்கதாகும்.

* சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சார முக்கியத்துவத்துக்கு சான்றாக, நீலகிரி வரையாடு தமிழகத்தின் மாநில விலங்காக அறிவிக்கப்பட்டுள்ளது.

The post ரூ.1 கோடி செலவில் கோட்டை முன்பு பிரமாண்டமாக மாநில விலங்கு வரையாடு சின்னம்: மாநகராட்சி சார்பில் விரைவில் டெண்டர் appeared first on Dinakaran.

Related Stories: