புஷ்பா கேரக்டர் பற்றி சொன்னது என்ன? ஐஸ்வர்யா ராஜேஷின் கருத்துக்கு ராஷ்மிகா பதில்

சென்னை: புஷ்பா படம் தொடர்பாக ஐஸ்வர்யா ராஜேஷ் சொன்ன கருத்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது பற்றி ராஷ்மிகா பதில் கூறியிருக்கிறார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், ‘புஷ்பா படத்தில் ராஷ்மிகா மந்தனா ஸ்ரீவள்ளி கதாபாத்திரத்தில் நன்றாக நடித்தார். எனக்கு வாய்ப்பு கிடைத்திருந்தால் நானும் அதுபோன்ற கேரக்டரில் நடிக்க விரும்புகிறேன்’ என்ற அர்த்தத்தில் பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து ராஷ்மிகாவை விட நான்தான் ஸ்ரீவள்ளி கேரக்டருக்கு சரியானவள் என பொருள்படும்படி இணையதளத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் பேட்டி வெளியாகியது. இதனால் சினிமா வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து தனது பேச்சு குறித்து விளக்கமளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். அதில், ‘நான் உதாரணத்துக்காக கூறிய பதில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. தெலுங்கில் நடிப்பது எனக்கு பிடிக்கும். புஷ்பா படத்தில் வரும் ராஷ்மிகாவின் கேரக்டரும் பிடிக்கும் என்றுதான் சொன்னேன். எனக்கு ராஷ்மிகா மீதும் அவரது நடிப்பின் மீதும் மிகுந்த மரியாதை உண்டு. ராஷ்மிகா கடுமையாக உழைத்து இந்த நிலைக்கு வந்திருக்கிறார்’ என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஐஸ்வர்யா ராஜேஷின் இந்த அறிக்கைக்கு டிவிட்டரில் பதிலளித்துள்ள ராஷ்மிகா மந்தனா கூறியுள்ளதாவது: ‘ஹாய் அன்பே, இப்போதுதான் இதனை பார்த்தேன். நீங்கள் எந்த அர்த்தத்தில் அதை கூறினீர்கள் என்று எனக்கு நன்றாகவே புரிந்தது. நம்மைப் பற்றி நாம் விளக்கம் கூற அவசியம் இல்லை என்று நினைக்கிறேன். ஏனெனில் நான் உங்கள் மீது அன்பும் மரியாதையும் மட்டுமே வைத்திருக்கிறேன் என்று உங்களுக்கு தெரியும். மீண்டும் ஒருமுறை உங்கள் ‘ஃபர்ஹானா’ படத்துக்கு என்னுடைய வாழ்த்துகள்” இவ்வாறு ராஷ்மிகா கூறியுள்ளார்.

The post புஷ்பா கேரக்டர் பற்றி சொன்னது என்ன? ஐஸ்வர்யா ராஜேஷின் கருத்துக்கு ராஷ்மிகா பதில் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: