ஒரே காட்சியில் உருவான படம்

சென்னை: தமிழ் சினிமாவில் அவ்வப்போது சாதனை முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதுண்டு. ஒரே ஷாட்டில் உருவான படம், ஒருவர் மட்டுமே நடித்த படம். 24 மணி நேரத்தில் உருவான படம் இப்படி ஏராளமான சாதனை முயற்சிகள் நடந்திருக்கிறது. அறிமுக இயக்குனர் யாழ் குணசேகரன் ‘கெழப்பய’ என்ற படத்தை ஒரே காட்சியாக படமாக்கி உள்ளார். இந்த படத்திற்கு அஜீத்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், கேபி இசை அமைத்துள்ளார். படம் பற்றி இயக்குனர் யாழ் குணசேகரன் கூறும்போது, ‘இந்த படம் சாதனை முயற்சி என்பதோடு இந்த கதைக்கு ஒரு காட்சியே போதுமானதாக இருந்தது.

செக்யூரிட்டி வேலை செய்யும் 65 வயது முதியவர் தன் சைக்கிளில் சாலையில் சென்றுகொண்டிருக்கும் போது, பின்னால் வரும் ஒரு கார் தொடர்ந்து ஹாரனை ஒலித்துக்கொண்டே வர, அந்த காருக்கு வழியை விடாமல் தொடர்ந்து செல்கிறார். தங்களுக்கு வழிவிட மறுக்கும் முதியவரின் செயல் அவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்த, காரை நிறுத்திவிட்டு அவரிடம் சென்று பேச, முதியவர் அவர்களை எந்தவித காரணமும் இன்றி தாக்குகிறார்.

கோபம் அடைந்த அவர்கள் முதியவரை திருப்பி தாக்குகிறார்கள். இதுதான் அந்த காட்சி. அந்த முதியவர் ஏன் அந்த காரை தடுக்கிறார் என்பதுதான் படத்தின் சஸ்பென்ஸ் பகுதி, முதியவராக கதிரேசகுமார் நடித்திருக்கிறார். மற்ற அனைவரும் புதியவர்கள். பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டு பெற்ற படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகிறது’ என்றார்.

The post ஒரே காட்சியில் உருவான படம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: