கடம்பாடி பகுதியில் திமுகவினர் சமத்துவ பொங்கல் விழா

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளரும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவுறுத்தலின்பேரில், மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி பகுதியில் திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா திருக்கழுக்குன்றம் திமுக ஒன்றிய துணை செயலாளர் கே.கே.பூபதி தலைமையில் நடந்தது. இதில், பழங்குடி இருளர்கள் மற்றும் திமுகவினர் 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து, பழங்குடி இருளர்கள் 800க்கும் மேற்பட்டோருக்கு வேட்டி-சேலைகள் வழங்கப்பட்டது. அப்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் ஏழை-எளிய கடைகோடி மக்களுக்கும் நலத்திட்ட உதவிகள் எளிதில் கிடைப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

இதுகுறித்து, பழங்குடி இருளர் பெண்கள் கூறுகையில், ‘முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்து நாட்டு மக்கள் பயன் பெறும் வகையில் ஏராளமான திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. குறிப்பாக, பழங்குடி இருளர்கள், நரிக்குறவர்களுக்கு எப்போதும் இல்லாத வகையில் குடியிருக்க வீட்டு மனை பட்டா, குடும்ப அட்டை, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் புதிதாக அரசு வீடுகள் வழங்கி கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் நலத்திட்ட உதவிகள் மற்றும் கடனுதவிகள் எங்கள் சமுதாயத்திற்கு எளிதில் கிடைக்கிறது. இந்த நாட்டில் பலர் எங்களை ஒதுக்கி வைத்து, ஒரு மாதிரியாக பார்க்கும் நிலையில், பொங்கல் விழாவில் எங்களையும் அழைத்து கொண்டாடி மகிழ்ச்சிபடுத்தி, புத்தாடை கொடுத்து வாழ்த்திய திமுகவினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்’ என்றனர்.

The post கடம்பாடி பகுதியில் திமுகவினர் சமத்துவ பொங்கல் விழா appeared first on Dinakaran.

Related Stories: