மதுரையில் கனமழை; மக்களுக்கு தேவையான உதவிகளை உடனடியாக அரசு செய்ய வேண்டும்; பிரேமலதா வலியுறுத்தல்

சென்னை: தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை: மதுரையில் கனமழை பெய்ததினால் மதுரை முழுவதும் தண்ணீர் தேங்கி குடியிருப்புகளை சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் உடனடியாக வடிவதற்கு வைகை ஆறு மற்றும் குளங்கள் இயற்கையாகவே அமைந்திருக்கும் மதுரையில் இந்த அளவு தண்ணீர் தேங்க வேண்டியதன் காரணம் என்ன? கண்மாய், ஓடைகள் முறையாக தூர்வாராமல் இருந்ததினாலே ஆலங்குளம் கண்மாயில் உடைப்பு ஏற்பட்டு அதனை சுற்றியுள்ள பகுதிகளாகிய பீபிகுளம், செல்லூர் போன்ற பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

பெரும் மழையாக இருந்தாலும் ஓரிரு நாள் மழைக்கே ஏன் இந்த அளவு பாதிப்பு என்பதனை ஆராய்ந்து மதுரை மாநகராட்சி மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். உடனடியாக மாநகராட்சியும், அதிகாரிகளும் களத்தில் இறங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேண்டிய உணவு, உடை, மருந்து, மாத்திரைகள், தங்குவதற்கான இடம் கொடுத்து அவர்களை பாதுகாத்திட வேண்டும். தேங்கிய தண்ணீரை உடனடியாக அப்புறப்படுத்தி நோய் பரவாமல் தடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உடனடியாக உதவிகளை செய்து இந்த மழைக் காலத்தில் காக்க வேண்டியது இந்த அரசின் கடமை.

The post மதுரையில் கனமழை; மக்களுக்கு தேவையான உதவிகளை உடனடியாக அரசு செய்ய வேண்டும்; பிரேமலதா வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: