அதிக பாரத்துடன் செல்லும் கனரக வாகனங்களால் விபத்து அபாயம்: பொதுமக்கள் அச்சம்

திருத்தணி: விதிமுறையை மீறி இயக்கப்படும் கனரக வாகனங்களால், திருத்தணியில் விபத்து அபாயம் நிலவி வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை ஆகிய பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட கல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. கல் குவாரிகளிலிருந்து எம்.சாண்ட், சிப்ஸ், ஜல்லி போன்றவை கனரக வாகனங்களில் தினமும் திருத்தணி வழியாக திருவள்ளூர், சென்னை உட்பட பல்வேறு பகுதிகளுக்குச் செல்கிறது. குறிப்பிட்ட அளவைவிட அதிக பாரம் ஏற்றிச் செல்வதாலும், தார்ப்பாய் மூடாமல் திறந்த நிலையில் எடுத்துச்செல்வதாலும் ஜல்லி, சிப்ஸ் லாரிகளிலிருந்து சாலையில் கொட்டப்படுகிறது.

இதனால், சாலையில் இருசக்கர வாகனங்களில் சென்றுவரும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். மேலும் எம்.சாண்ட் பெரும்பாலான வாகனங்களில் மூடாமல் எடுத்துச் செல்வதால், பொதுமக்களுக்கு கண் எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. விதிமீறி தொடர்ந்து கனரக வாகனங்களில் அதிக பாரம் எடுத்துச் சென்றாலும் போக்குவரத்து போலீசார், மோட்டார் வாகன ஆய்வாளர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே விதிமீறி அதிக பாரத்துடன் செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

The post அதிக பாரத்துடன் செல்லும் கனரக வாகனங்களால் விபத்து அபாயம்: பொதுமக்கள் அச்சம் appeared first on Dinakaran.

Related Stories: