தங்களை விடுவிக்க கோரி மரங்களில் ஏறி இலங்கை அகதிகள் போராட்டம்

 

திருச்சி, அக்.18: திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள், தங்களை விடுவிக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அகதிகள் சிறப்பு முகாம் உள்ளது. இங்கு இலங்கை உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள், உரிய ஆவணங்களின்றி வந்தவர்கள் 110 க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். இதில், இலங்கை தமிழர்களுக்கு வழக்கு தொடர்பாக நீதிமன்றங்களுக்கு செல்லவோ, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவோ, நீதிமன்றம் மற்றும் தூதரங்கள் தொடர்பான ஆவணங்களில் கையெழுத்திடவோ மாவட்ட நிர்வாகம் (மண்டல தனித்துணை ஆட்சியர்) தரப்பில் மறுப்பு தெரிவிப்பதாக புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில், தங்களுக்கான அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதை கண்டித்தும், வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு மற்றும் தண்டனை முடிந்த தங்களை விடுவிக்கக் கோரியும் 10க்கும் மேற்பட்டோர், நேற்று காலை முதல் போராட்டத்தில் ஈடுபடுள்ளனர். இதில் 5 பேர் மரத்தின் மீது ஏறியும், சிலர் கதவுகளை அடித்தும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதையடுத்து, திருச்சி வருவாய் கோட்டாட்சியர் அருள், முகாம் தனித்துணை கலெக்டர் நசிமுல் நிஷா, மாநகர போலீஸ் துணை கமிஷனர் செல்வகுமார் மற்றும் போலீசார் முகாமில் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் போராட்டக்காரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

The post தங்களை விடுவிக்க கோரி மரங்களில் ஏறி இலங்கை அகதிகள் போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: