சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 11ம் வகுப்பு மாணவர்கள்: எச்சரித்து அனுப்பிய காவல்துறை

சென்னை: சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 11ஆம் வகுப்பு சிறுவர்களை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர். தற்போது வெடிகுண்டு மிரட்டல்களானது, இ-மெயில், குறுஞ்செய்தி, தொலைபேசி என பல்வேறு வழிகளில் விமான நிலையம், பள்ளிகளுக்கு அவ்வப்போது வந்து கொண்டிருக்கிறது. அடிக்கடி இதுபோன்ற போலி மிரட்டல்கள் வந்தாலும், காவல்துறையினர் தொடர்ந்து உரிய சோதனை மேற்கொண்டு, விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் உள்ள கழிவறை பகுதியில் சக்திவாய்ந்த வெடிகுண்டு இருந்ததாக காவல்துறை கட்டுப்பட்டு அறைக்கு தொலைபேசி வாயிலாக குறுந்செய்தி வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வெடிகுண்டு மிரட்டல் செய்தியை அடுத்து, காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு சோதனையாளர்கள் விமான நிலையத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். இறுதியில் அந்த செய்தி புரளி என தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த விமான நிலைய பகுதி போலீசார், மிரட்டல் விடுத்த நபர் யார் என விசாரணையை தீவிரப்படுத்தினர். அதில், தாம்பரம் பகுதியை அடுத்த சேலையூரில் உள்ள 11ஆம் வகுப்பு மாணவனும், அஸ்தினாபுரத்தை சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவனும் இணைந்து இந்த மிரட்டல் செய்தியை வெளியிட்டது தெரியவந்தது. அந்த 2 மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களை நேரில் வரவழைத்து மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கிய போலீசார், இனி இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.

The post சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 11ம் வகுப்பு மாணவர்கள்: எச்சரித்து அனுப்பிய காவல்துறை appeared first on Dinakaran.

Related Stories: