தீபாவளி பண்டிகையால் மவுசு அதிகரிப்பு 15,000 டன் மரச்செக்கு கடலை எண்ணெய் ஏற்றுமதி

திருப்பத்தூர்: திருப்பத்தூரில் இருந்து ஆந்திரா, கர்நாடகாவுக்கு தீபாவளி பண்டிகை பலகாரம் செய்ய மரச்செக்கு கடலை எண்ணெய் 15 ஆயிரம் டன் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் அடுத்த வெங்களாபுரம், கந்திலி, ஜோலார்பேட்டை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் எண்ணெய் தயாரிக்கும் 300க்கும் மேற்பட்ட மரச்செக்கு தொழிற்சாலைகள் உள்ளன. குடிசைத் தொழிலாகவும் கடலை எண்ணெய் தயாரிப்பு நடைபெற்று வருகிறது.

தீபாவளி பண்டிகை நெருங்கி உள்ளதால் மரச்செக்கு கடலை எண்ணெய்க்கு மவுசு அதிகரித்துள்ளது. இதனால் இரவு, பகல் பாராமல் மரச்செக்குகள் அனைத்தும் 24 மணி நேரமும் இயங்கத் தொடங்கிவிட்டது. திருப்பத்தூர் மாவட்டத்தில் தயார் செய்யப்படும் கடலை எண்ணெய் அனைத்தும் தமிழகத்தில் உள்ள சேலம், கோயம்புத்தூர், பவானி, கிருஷ்ணகிரி, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் ஆந்திரா, கர்நாடகா போன்ற பிற மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது.

தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் பல்வேறு பகுதிகளுக்கு இந்த கடலை எண்ணெய் அனுப்பும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தற்போது வரை திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து 15 ஆயிரம் டன் கடலை எண்ணெய் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஒரு சில மரச்செக்கு உரிமையாளர்கள் தங்கள் சுய லாபத்திற்காக கலப்படம் செய்து கவிற்பனை செய்வதாகவும், கடலை எண்ணெயில் பாமாயில் கலந்தும் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளது. எனவே சரியான முறையில் தரமாக கடலை எண்ணெய் தயாரிக்கும் மரச்செக்கு தொழிற்சாலைகளுக்கு பாதிப்புகள் ஏற்படாதவாறு உணவு பாதுகாப்புத்துறையினர் ஆய்வு செய்யவும் கோரிக்கைகள் எழுந்துள்ளது.

கலப்படம் கண்டுபிடிப்பது எப்படி?

உணவு பாதுகாப்பு அதிகாரி பழனிசாமி கூறுகையில், ‘கலப்படத்தை தவிர்க்க கடலை எண்ணெய் நிறத்தை பார்க்கும் போது மஞ்சள் நிறத்தில் இருக்க வேண்டும். கடலை எண்ணெயில் பாமாயில் கலந்தால் நுகரும்போது வாசனை தெரிந்துவிடும். அதேபோல் நிறம் மிகவும் திடமாக இருக்கும். அதனைப் பார்த்து கண்டுபிடித்து விடலாம். சமையலுக்கு கடலை எண்ணெய் பயன்படுத்தும் போது அந்த எண்ணெய் சூடாகி கொதிக்கும் போது கடலை எண்ணெய் மணம் வீசும். பாமாயில் கலந்த எண்ணெய் ஒரு விதமான வாசனையை கொடுக்கும் அதை வைத்து கண்டுபிடித்துக் கொள்ளலாம். சந்தேகம் இருந்தால் உடனடியாக உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கலாம். நாங்கள் அந்த மரச்செக்கு ஆலையில் சோதனை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்போம்’ என்றனர்.

* ரூ.3 லட்சம் அபராதம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் மட்டும் 300க்கும் மேற்பட்ட மரச்செக்குகளில் தயாராகும் எண்ணெயை எடுத்து சென்னையில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பியதில் நூற்றுக்கும் மேற்பட்ட எண்ணெய் மரச்செக்கு ஆலைகளில் கலப்படம் செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து அந்த ஆலைகளுக்கு ரூ.3 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

The post தீபாவளி பண்டிகையால் மவுசு அதிகரிப்பு 15,000 டன் மரச்செக்கு கடலை எண்ணெய் ஏற்றுமதி appeared first on Dinakaran.

Related Stories: