நெடுஞ்சாலைத்துறையின் அனைத்து அலுவலர்களும் பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும்: அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தல்

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து கடந்த 2 நாட்களாக பெய்த மழையால் சாலைகள் சேதமடைந்துள்ளன. நெடுஞ்சாலைத் துறை மூலம் சென்னை பெருநகர மாநகராட்சியில் 270 கி.மீ. சாலைகள், 347 சிறிய மற்றும் பெரிய பாலங்கள், 237 கி.மீ. மழைநீர் வடிகால் அமைப்புகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. சென்னை ராஜீவ்காந்தி சாலையில் குறிப்பாக மத்திய கைலாஷ், எஸ்ஆர்பி டூல்ஸ் சந்திப்பு, காரப்பாக்கம், துரைப்பாக்கம் மற்றும் ஒக்கியம் மடுவு பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்கள் மற்றும் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் நீர்இறைப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், பல்லாவரம், துரைப்பாக்கம் சாலை மற்றும் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் வழியாக செல்லும் சாலையில் உள்ள 16 சிறு பாலங்கள் தூர்வாரும் பணி, தில்லை கங்கா நகர் வாகன சுரங்கப்பாதையில் நீர் இறைக்கும் பணிக்கான 300 எச்பி திறன் கொண்ட மோட்டார் மற்றும் 300 கி.வா. திறன் உள்ள ஜெனரேட்டர் மற்றும் அதன் இயங்கும் திறன், 24 மணி நேரமும் கண்காணிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை உள்வட்ட சாலை விருகம்பாக்கம் நல்லா கால்வாயில் மழைக்காலங்களில் ஓடும் நீர், சாலை மட்டத்தைவிட உயர்ந்து செல்வதால், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. இதனை தவிர்க்க தக்க ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.

ஈ.வெ.ரா. சாலையில் சென்னை மாநகர காவல் அலுவலகம், ஆண்ட்ரூ சர்ச் பகுதிகளில் மழைநீர் தேங்கா வண்ணம் கட்டி முடிக்கப்பட்ட இணைப்பு கால்வாயும், அதனை தொடர்ந்து ரயில்வே இருப்பு பாதையை கடந்து பக்கிங்காம் கால்வாய் சேரும் வகையில் அமைக்கப்பட்ட பாலம் உள்ளிட்டவற்றை பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். நெடுஞ்சாலைத் துறை அனைத்து அலுவலர்களும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் தயார் நிலையிலும், கண்காணிப்புடன் இருக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

The post நெடுஞ்சாலைத்துறையின் அனைத்து அலுவலர்களும் பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும்: அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: