பெரிய நிறுவனங்களுக்கு தமிழ்நாடே முதல் முகவரி; டாடா குழுமத்தின் முதலீடு மகிழ்ச்சி அளிக்கிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் பணப்பாக்கத்தில் ரூ.9 ஆயிரம் கோடியில் 470 ஏக்கரில் அமையவுள்ள டாடா, ஜாக்குவார், லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், டி.ஆர்.பி. ராஜா, ஆர்.காந்தி, டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கடந்த 1969 ஆம் ஆண்டு டாடா நிறுவனர் ஜே.ஆர்.டி. டாடாவுடன், தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுகவின் முன்னாள் தலைவருமான கலைஞர் இருக்கும் புகைப்படத்தை முதல்வர் ஸ்டாலினுக்கு, டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் அன்பளிப்பாக வழங்கினார். அதோடு ரூ.400 கோடி மதிப்பில் 250 ஏக்கரில் அமையவுள்ள காலணி ஆலைக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

“டாடா குழுமத்தின் முதலீடு மகிழ்ச்சி அளிக்கிறது”
டாடா தொழில் நிறுவனம் வைத்துள்ள நம்பிக்கைக்காக நாங்களும் பெருமிதம் கொள்கிறோம். டாடா குழுமம் தமிழ்நாட்டில் தொழிற்சாலைகளை விரிவுபடுத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது என முதல்வர் கூறினார்.

“பெரிய நிறுவனங்களுக்கு தமிழ்நாடே முதல் முகவரி”
இந்தியாவின் பெரிய நிறுவனங்கள் மட்டுமல்ல, உலகின் பெரிய நிறுவனங்களுக்கும் தமிழ்நாடே முகவரியாக உள்ளது. உலக அளவில் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் டாடா குழுமம் செயல்பட்டு வருகிறது. நான் முதல்வன் திட்டத்தில் டாடா குழும நிறுவனங்களும் இணைந்து செயல்பட்டு வருகிறது. தகவல் தொழில்நுட்பத் துறையில் சிறந்து விளங்கும் டாடா குழுமத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. பெண்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கி வரும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என முதல்வர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

டாடா குழும தலைவருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு
நாமக்கல்லில் வேளாண் குடும்பத்தில் பிறந்து முன்னணி நிறுவனமான டாடா குழுமத்தின் தலைவராக சந்திரசேகரன் திகழ்கிறார். இந்திய இளைஞர்களுக்கு முன்மாதிரியாக டாடா குழும தலைவர் சந்திரசேகரன் விளங்குகிறார். தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் முக்கியமான நாளாக இன்றைய தினம் திகழ்கிறது என முதல்வர் கூறினார்.

டாடா குழுமம் மேலும் முதலீடு செய்ய முதல்வர் ஸ்டாலின் அழைப்பு
டாடா குழுமம் தமிழ்நாட்டில் கூடுதல் முதலீடுகளை செய்ய முன்வர வேண்டும். அனைத்து மாவட்டங்களுக்கும் சீரான வளர்ச்சி என்ற வகையில் ராணிப்பேட்டையில் தொழிற்சாலை அமைவதில் மகிழ்ச்சி. 1973-ம் ஆண்டு ராணிப்பேட்டையில் கலைஞர், முதல் சிப்காட்-ஐ தொடங்கி வைத்தார். 50 ஆண்டுகளில் கார் உற்பத்தி ஆலைகள் உள்பட பல தொழிற்சாலைகள் ராணிப்பேட்டையில் அமைந்துள்ளன.

மின்னணு பொருட்கள் உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடம்
மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு விளங்குகிறது. 2030-க்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என தொழில்துறைக்கு நான் இலக்கு கொடுத்துள்ளேன். தமிழ்நாட்டின் இளைஞர்கள் முன்னேற்றத்துக்காக திராவிட மாடல் அரசு தொடர்ந்து பணியாற்றும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

The post பெரிய நிறுவனங்களுக்கு தமிழ்நாடே முதல் முகவரி; டாடா குழுமத்தின் முதலீடு மகிழ்ச்சி அளிக்கிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.

Related Stories: