அண்ணனூர் ரயில் நிலையத்தில் தண்டவாளம் அருகே திடீர் பள்ளம்: ரயில் சேவை பாதிப்பு

ஆவடி: அண்ணனூர் ரயில் நிலையத்தில் தண்டவாளம் அருகே திடீர் பள்ளம் ஏற்பட்டதால் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது. ஆவடி அடுத்த அண்ணனூர் ரயில் நிலையத்தில், தண்டவாளத்தையொட்டி செல்லும் மின் கம்பிகளை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இங்கு, நேற்று காலை தண்டவாளத்தையொட்டி திடீரென ராட்சத பள்ளம் ஏற்பட்டது. தகவலறிந்து அங்கு வந்த ரயில்வே ஊழியர்கள் பள்ளத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக சுமார் ஒரு மணி நேரமாக ஆவடியில் இருந்து சென்ட்ரல் மற்றும் சென்ட்ரலில் இருந்து ஆவடி நோக்கிச் செல்லும் மின்சார ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. இதனிடையே, விரைவு ரயில் பாதையில் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டன. இந்த ரயில்கள், விரைவு ரயில்கள் நிற்கும் நடைமேடை இல்லாத பட்டாபிராம், இந்து கல்லூரி, அண்ணனூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நிற்காமல் சென்றன.

மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டதால் பள்ளி, கல்லூரிகுச் சென்ற மாணவ, மாணவிகள் மற்றும் வேலைக்குச் சென்ற பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். ரயில்வே ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு பள்ளத்தை சரி செய்தபின் மின்சார ரயில் சேவை இயல்பு நிலைக்கு திரும்பியது.

The post அண்ணனூர் ரயில் நிலையத்தில் தண்டவாளம் அருகே திடீர் பள்ளம்: ரயில் சேவை பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: