சேத்தியாத்தோப்பு அருகே தாய், தந்தையை இழந்து வாடும் 4 சிறுமிகள்

*அரசு உதவி செய்ய கோரிக்கை

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அருகே தாய், தந்தையை இழந்து வாடும் 4 சிறுமிகளுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே அள்ளூர் கிராமத்தில் இளஞ்செழியன்- வீரம்மாள் தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு கூலி வேலைதான் பிரதான தொழில்.

இந்த தம்பதிக்கு ஜனனி (14), ஜமுனா (12), சஞ்சனா (9), சாதனா (6) என நான்கு பெண் பிள்ளைகள். இவர்கள் அருகிலுள்ள உயர்நிலை மற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் இளஞ்செழியன் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார்.

அதன் பிறகு வீரம்மாள் பிள்ளைகளை கூலி வேலை செய்து காப்பாற்றி வந்த நிலையில் வீரம்மாளுக்கு ரத்த புற்று நோய் பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் உயிரிழந்தார். இந்நிலையில் அள்ளூர் கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வரும் தங்களை காப்பாற்ற யாரும் இல்லாத நிலையில் தங்களது கல்வி மற்றும் எதிர்கால வாழ்க்கைக்கு அரசு உதவிகள் செய்ய வேண்டும் என நான்கு சிறுமிகளும் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர். இவர்களது தாயாரின் இறுதி மரியாதையை அள்ளூர் கிராம மக்கள் செய்தனர். மேலும் தற்காலிகமாக இந்த நான்கு சிறுமிகளுக்கும் தேவையான உதவிகளை கிராம மக்கள் செய்து வருகின்றனர்.

The post சேத்தியாத்தோப்பு அருகே தாய், தந்தையை இழந்து வாடும் 4 சிறுமிகள் appeared first on Dinakaran.

Related Stories: