சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி , தான் போட்டியிடும் 5 தொகுதிகளுக்கான அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டது. சென்னையில் உள்ள கட்சியின் மாநிலத் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் நேற்று நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் இந்த வேட்பாளர் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.
திருத்துறைப்பூண்டி (தனி) சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக க. மாரிமுத்து, தளி (பொது) வேட்பாளராக டி. ராமச்சந்திரன், பவானிசாகர் (தனி) வேட்பாளராக பி.எல். சுந்தரம், திருப்பூர் வடக்கு (பொது) வேட்பாளராக எம்.ரவி, ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) வேட்பாளராக மகாலிங்கம் ஆகியோர் போட்டியிடுகின்றனர். ‘‘அதிகாரப்பூர்வமாகக் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்படுகிறது. உழைப்பாளி மக்கள் நலன், நாட்டு நலன், மொழி சார்ந்த நலன், இந்தியாவின் ஒற்றுமை, நாட்டைச் சூறையாடுகிற கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராகத் தற்சார்பு ஆகியவற்றை வலியுறுத்தித் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது’’ என்று வீரபாண்டியன் தெரிவித்தார்.
