மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூலத்திருவிழாவில் விறகு விற்ற லீலை அலங்காரம்

மதுரை: மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூலத் திருவிழாவில் நேற்று விறகு விற்ற திருவிளையாடல் லீலை அலங்காரத்தில் சுந்தரேஸ்வரர் காட்சியளித்தார். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்று வரும் ஆவணி மூலத்திருவிழாவில் நேற்று முன்தினம் பிட்டுக்கு மண் சுமந்த லீலை நடைபெற்றது. அதனை தொடர்ந்து நேற்று விறகு விற்ற லீலை அலங்காரத்தில் பிரியாவிடையுடன், சுந்தரேஸ்வரர், மீனாட்சி அம்மன் காட்சி அளித்தனர்.

விறகு விற்ற லீலை குறித்து பட்டர்கள் கூறுகையில், ‘‘வரகுணபாண்டியன் மதுரையை ஆட்சி செய்த காலத்தில் புலவர் ஏமநாதன், பாண்டிய நாட்டுக்கு வந்தார். அவர் யாழ் வாசிப்பதில் வல்லவர். அரசன் முன்பு யாழ் மீட்டினார். அந்த யாழிசையில் மயங்கிய அரசன், ஏமநாதனை பாராட்டினான். இதனால் ஏமநாதனும், அவனது சீடர்களும் மிகவும் செருக்கடைந்தார்கள். மேலும் ஏமநாதன் பாண்டிய நாட்டில் என்னுடன் போட்டியிட யாராவது உள்ளார்களா என ஆணவத்துடன் சவால் விட்டார்.

ஆனால் அவரை எதிர்த்து யாரும் போட்டியிட முன்வரவில்லை. எனவே, பாண்டிய மன்னன் தனது அரசவையின் ஆஸ்தான வித்வானான பாணபத்திரனை அழைத்து ஏமநாதனுடன் போட்டியிடுமாறு பணித்தார். தெருவெங்கும் ஏமநாதன் சீடர்களின் யாழிசையை கேட்ட பாணபத்திரன் அவர்களை வெல்ல வழி தெரியாமல் சோமசுந்தரரை வேண்டி நின்றார். அவரது வேண்டுதலுக்கு இணங்க, இறைவனும் முதியவர் உருவத்தில் விறகு விற்பவராக ஒரு யாழை எடுத்துக்கொண்டு ஏமநாதன் தங்கியிருந்த வீட்டுத்திண்ணையில் வந்து அமர்ந்தார்.

அங்கு யாழினை வாசித்துக்கொண்டே பாடினார். அந்த தெய்வீக கானத்தை கேட்ட ஏமநாதன் வெளியே வந்து விறகு விற்பவரை நீ யார்? என்று கேட்க, அவரும் ‘பாணபத்திரரால் வயோதிகர் என்று ஒதுக்கப்பட்ட ஆள் நான்’ என்று கூறினார். ஒதுக்கப்பட்ட ஆளுக்கே இவ்வளவு திறமையா? அப்படியானால் பாணபத்திரரை தன்னால் வெல்ல முடியாது என அஞ்சிய ஏமநாதன் இரவோடு இரவாக மதுரையை விட்டே சென்றார்’’ என்றார்.தொடர்ந்து இரவு 8 மணிக்கு சுந்தரேஸ்வரர் சுவாமி, மீனாட்சி அம்மன் இரவு 8 மணிக்கு தங்கச்சப்பர வாகனத்தில் எழுந்தருளி ஆவணி மூலவீதியை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

The post மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூலத்திருவிழாவில் விறகு விற்ற லீலை அலங்காரம் appeared first on Dinakaran.

Related Stories: