தேமுதிக 20ம் ஆண்டு துவக்க விழா: பிரேமலதா விஜயகாந்த் கொடியேற்றினார்

அண்ணாநகர்: தேமுதிகவின் 20ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கோயம்பேட்டில் உள்ள அந்த கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சி கொடியை பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஏற்றிவைத்தார். இதன்பின்னர் அவர் பேசியதாவது; இன்றைக்கு தமிழ்நாடு முழுவதும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில், கொடியேற்றுதல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி முப்பெரும் விழாவாக பொதுக் கூட்டங்களை நடத்தி கொண்டாப்பட்டு வருகிறது.

விஜயகாந்துக்கு பத்மபூஷண் விருது கொடுத்தது, அவரது 72வது பிறந்தநாள், தேமுதிகவின் 20ம் ஆண்டு துவக்க விழா இவற்றை முப்பெரும் விழாவாக கொண்டாடி வருகிறோம். கேப்டன் இல்லாத முதல் கட்சியின் துவக்க நாள் கொண்டாட்டம் இது. தற்போது தலைமை கழகத்தில் கொடி ஏற்றி இலவச மருத்துவ சிகிச்சை முகாம் தொடங்கி இருக்கிறோம். அதுமட்டுமல்ல உறுப்பினர் சேர்க்கை முகாமும் டிஜிட்டல் வாயிலாக துவங்க இருக்கிறோம். தலைமை அலுவலகம் அழைக்கப்பட்ட நம்முடைய அலுவலகம் இன்று முதல் கேப்டன் ஆலயம் என்று அழைக்கப்படும்.இவ்வாறு பேசினார்.

இதன்பிறகு நிருபர்களிடம் பிரேமலதா கூறியதாவது; ஜிஎஸ்டி வந்த பிறகு அனைவருடைய வாழ்க்கையும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. அன்னபூர்ணா உரிமையாளர் யதார்த்தமாக, நகைச்சுவையாகத்தான் அந்த கேள்வியை கேட்டார். இதில் எந்த உள்நோக்கம் இருப்பதாகவோ, அவர்களை அவமதிக்கும் நோக்கத்திலோ பேசியதாக எனக்கு தெரியவில்லை. அதேபோல அந்த நேரத்தில் நிதித்துறை அமைச்சரும் ஏற்றுக்கொண்டார். ஆனால் அதனை ஊடகங்கள் பெரிதாக்கியதால் தானாக முன்வந்து நிதி அமைச்சரை சந்திக்க வேண்டும் என்று அனுமதி பெற்று அதன் அடிப்படையில் சந்தித்து இருக்கிறார்.

அதில் அவர் மன்னிப்பு கேட்டிருக்கிறார். இவ்வளவுதான். இதை இவ்வளவு பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளவேண்டாம்.மகாவிஷ்ணு விவகாரம் பூதாகரமானது பார்த்தேன். அது அவ்வளவு பெரிய விஷயம் கிடையாது. இது வரை பல நாடுகளுக்கு முதலமைச்சர் சென்று இருக்கிறார். என்ன திட்டம் இங்கு வந்திருக்கிறது என்று மக்களுடைய கேள்வி தற்போது வந்திருக்கிறது. இதுசம்பந்தமாக முதலமைச்சர் வெள்ளை அறிக்கை தர வேண்டும்.

The post தேமுதிக 20ம் ஆண்டு துவக்க விழா: பிரேமலதா விஜயகாந்த் கொடியேற்றினார் appeared first on Dinakaran.

Related Stories: