முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி இணையதளத்தில் பதிவு செய்த வீரர்களுக்கு கலெக்டர் அழைப்பு

திருவள்ளூர், செப். 14: முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள இணையதளத்தில் பதிவு செய்த வீரர், வீராங்கனைகளுக்கு கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார். மாவட்ட கலெக்டர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கு திருவள்ளூர் மாவட்ட அளவிலான போட்டிகள் வரும் 24ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் சிலம்பம் போட்டிகள் தமிழ்நாடு சிறப்பு காவல் படை 5ம் அணி, ஆவடி, வைஷ்ணவி நகர் (முருகப்பா பாலிடெக்னிக் அருகில்), செஸ் போட்டிகள் நடைபெற உள்ளது. சிலம்பம் பள்ளி மாணவர்களுக்கு 16 மற்றும் 17ம் தேதி, கல்லூரி மாணவர்களுக்கு 18 மற்றும் 19ம் தேதி மற்றும் பொது பிரிவினருக்கு 20ம் தேதி, தமிழ்நாடு சிறப்பு காவல் படை 5ம் அணி ஆவடி, வைஷ்ணவி நகர், முருகப்பா பாலிடெக்னிக் அருகிலும், செஸ் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொது பிரிவினர் (இருபாலருக்கும்) 15 மற்றும் 16ம் தேதிகளில் காலை 7 மணி அளவில் மாவட்ட விளையாட்டரங்கத்திலும் நடைபெற உள்ளது.

நீச்சல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு 15ம் தேதி காலை 7 மணி அளவில் திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது. மேலும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்தில் போட்டிகளில் கலந்து கொள்ள பதிவு செய்த வீரர், வீராங்கனைகள் அட்டவணையில் கண்டுள்ள தேதிகளில் குறிப்பிட்ட நேரத்திற்கு 30 நிமிடங்களுக்கு முன்பாக தங்களுடைய இணையதளத்தில் பதிவு செய்த நகல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் உறுதி சான்றிதழ் மற்றும் அரசு ஊழியர்களின் அடையாள அட்டை நகல் மற்றும் பொதுமக்களுக்கு ஆதார் அட்டை நகல் மற்றும் இருப்பிட சான்றிதழ் ஆகியவற்றுடன் சேமிப்பு வங்கி கணக்கு புத்தக நகலையும் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை சந்தித்து தங்கள் வருகையை பதிவு செய்திட வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

The post முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி இணையதளத்தில் பதிவு செய்த வீரர்களுக்கு கலெக்டர் அழைப்பு appeared first on Dinakaran.

Related Stories: