மதுரை மீனாட்சியம்மன் கோயில் ஆவணி மூலத் திருவிழாவில் சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த லீலை: நாளை விறகு விற்ற திருவிளையாடல்

மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயில் ஆவணி மூலத்திரு விழாவை முன்னிட்டு, இன்று சிவபெருமான் ‘பிட்டுக்கு மண் சுமந்த லீலை’ நடந்தது. இதில், பல ஆயிரம் பக்தர்கள் கலந்து கொண்டனர். நாளை விறகு விற்ற லீலை நடைபெற உள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆவணி மூலத்திருவிழா நடந்து வருகிறது. இதில், சிவபெருமான் நிகழ்த்திய திருவிளையாடல்கள் தினசரி நடந்து வருகிறது. விழாவின் 9ம் நாளான இன்று இறைவன் ‘பிட்டுக்கு மண் சுமந்த லீலை’ நடந்தது. இதையொட்டி, மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோட்டில் உள்ள சொக்கநாதர் கோயிலில் நடந்த பிட்டுத் திருவிழாவிற்காக காலை 6 மணிக்கு சுவாமி சுந்தரேஸ்வரர், பிரியாவிடை மற்றும் மீனாட்சி அம்மன் மேள, தாளங்கள் முழங்க பரிவாரங்களுடன் கோயிலில் இருந்து புட்டுத்தோப்புக்கு வந்தனர்.

அதிகாலையில் இருந்தே பக்தர்கள் புட்டுத்தோப்பில் குவிந்தனர். பல வகையான புட்டு விற்பனை நடந்தது. மதியம் 1.25 மணிக்கு மேல் சொக்கநாதர் கோயிலில் ‘பிட்டுக்கு மண் சுமந்த லீலையை’ பட்டர்கள் அரங்கேற்றினர். அப்போது சுவாமி சுந்தரேஸ்வரர் தங்கத்தட்டில் மண் சுமக்கும் கோலத்தில் பிரியாவிடையுடன் காட்சியளித்தார். பட்டர்கள் சுவாமியாகவும், மன்னனாகவும் வேடமிட்டு திருவிளையாடலை அரங்கேற்றினர். சுவாமியாக வேடம் அணிந்த பட்டர், வந்திக்காக அளந்து விட்ட கரையை அடைக்காமல் தூங்குவது, மன்னராக வேடமிட்ட பட்டர் பொற்பிரம்பால் சுவாமியாக வேடமிட்ட பட்டரை அடிப்பது உள்ளிட்ட பல்வேறு காட்சிகள் நிகழ்த்தி காட்டப்பட்டன.

பக்தர்களின் தரிசனத்திற்கு பின்னர் இரவு 7 மணிக்கு சுவாமி சுந்தரேஸ்வரர் மற்றும் மீனாட்சி அம்மன் தனித்தனியே வெள்ளி ரிஷப வாகனங்களில் எழுந்தருளி மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வருகின்றனர். விழாவின் 10ம் நாளான நாளை விறகு விற்ற லீலை திருவிளையாடல் நடக்கிறது. புட்டு திருவிழாவை முன்னிட்டு ஆரப்பாளையம் உள்ளிட்ட பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

The post மதுரை மீனாட்சியம்மன் கோயில் ஆவணி மூலத் திருவிழாவில் சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த லீலை: நாளை விறகு விற்ற திருவிளையாடல் appeared first on Dinakaran.

Related Stories: