சீதாராம் யெச்சூரி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் அறிக்கை: இடதுசாரி இயக்கத்தின் முதுபெரும் தலைவரும், இந்திய அரசியலில் மிக உயர்ந்த தலைவருமான சீதாராம் யெச்சூரி மறைந்த செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியும், துயரும் அடைந்தேன். அஞ்சாநெஞ்சினராக மிள இளம் வயதில் இருந்தே நியாயத்துக்காக போராடும் தலைவராக இருந்தார். மாணவ தலைவராக துணிச்சலுடன் நெருக்கடி நிலையை அவர் எதிர்த்து நின்றதே இதற்கு சான்றாகும்.

பாட்டாளி வர்க்கத்தின் நலன், மதச்சார்பின்மை, சமூகநீதி, சமத்துவம் மற்றும் முற்போக்கு கருத்தியல்கள் மீது அவர் கொண்டிருந்த அர்ப்பணிப்பினால் வார்க்கப்பட்ட அவரது புகழ்வாய்ந்த அரசியல் வாழ்க்கை அடுத்து வரும் பல தலைமுறைகளை தொடர்ந்து ஊக்குவிக்கும்.  அவருடனான கருத்தாழமிக்க கலந்துரையாடல்கள் என்றும் என் நெஞ்சுக்கு நெருக்கமானதாக நிலைத்து நிற்கும்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் தோழர்களுக்கும் இதயபூர்வமான இரங்கலை இக்கடினமான வேளையில் தெரிவித்துக் கொள்கிறேன். செவ்வணக்கம் தோழரே மேலும், மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post சீதாராம் யெச்சூரி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.

Related Stories: