வடகிழக்கு பருவ மழையையொட்டி பராமரிப்பு பணிகள் 88% நிறைவு: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

சென்னை: சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக தலைமை அலுவலத்தில் எரிசக்தித் துறை மானியக் கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அதனை செயல்படுத்துதல் குறித்த ஆய்வுக் கூட்டம் நிதி, மனிதவள மேலாண்மை மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் நேற்று நடந்தது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் இதுவரை, அறிவிக்கப்பட்ட 108 அறிவிப்புகளில், 1,50,000 இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்குதல், 3 புதிய மின் பகிர்மான மண்டலங்கள் அமைத்தல் உள்ளிட்ட 28 முக்கிய அறிவிப்புகள் முழுமையாக செயல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், 78 அறிவிப்புகளுக்கான பணிகள் பல்வேறு நிலைகளில் துரிதமாக நடந்து வருகிறது. இப்பணிகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்ட அமைச்சர், பணிகளை எடுத்து முடிப்பதற்கு தேவையான தளவாட பொருட்கள் மற்றும் மின் சாதனங்களை விரைந்து கொள்முதல் செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறும், பணிகளை விரைந்து முடித்து குறித்த காலத்திற்குள் செயல்பாட்டிற்கு கொண்டு வருமாறும் அறிவுரைகள் வழங்கினார்.

வருகிற வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ளவும், தடையில்லா சீரான மின்சாரம் வழங்குவதற்காகவும், கடந்த ஜூலை 1ம் தேதி முதல் ஒருங்கிணைந்த பராமரிப்பு பணிகள் தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றுள், தற்போதைய நிலவரப்படி, 31,328 பழுதடைந்த மின்கம்பங்கள் புதிதாக மாற்றப்பட்டிருக்கின்றன. சாய்ந்த நிலையில் இருந்த 24,943 மின் கம்பங்கள் சரிசெய்யப்பட்டிருக்கின்றன. புதிதாக 15,841 மின் கம்பங்கள் இடைசெருகல் செய்யப்பட்டிருக்கின்றன. 1,53,149 இடங்களில் பலவீனமான இன்சுலேட்டர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன. 30,739 இடங்களில் மின்கம்ப தாங்கு கம்பிகள் புதுப்பிக்கப்பட்டிருக்கின்றன.

இவற்றுடன், சுமார் 1,259 கி.மீ. பழைய மின்கம்பிகள் புதியதாக மாற்றப்பட்டிருக்கின்றன. ஒட்டுமொத்தமாக 4,13,503 (88 சதவீத) பராமரிப்பு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பராமரிப்பு பணிகளை ஒரு மாத காலத்திற்குள் விரைந்து முடிக்க அமைச்சர் அறிவுறுத்தினார். பராமரிப்பு பணிகளுக்காக திட்டமிடப்பட்ட மின் நிறுத்தங்களின் போது, ஆங்காங்கே மின் தடை ஏற்படுவது குறித்து ஆய்வு மேற்கொண்ட அமைச்சர், மின் நிறுத்த நேரம் குறித்து மின் நுகர்வோர்களுக்கு முன்னரே குறுந்தகவல் மூலமும், பத்திரிகை செய்தி வாயிலாகவும் தகவல் தெரிவிக்கப்படுவதை உறுதி செய்ய அறிவுறுத்தினார்.

The post வடகிழக்கு பருவ மழையையொட்டி பராமரிப்பு பணிகள் 88% நிறைவு: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: